டிஎன்பிஎஸ்சி முறைகேடு முக்கிய குற்றவாளி சரண்.. அரசியல் புள்ளிகள் சிக்குமா?

by எஸ். எம். கணபதி, Feb 6, 2020, 14:01 PM IST

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜெயக்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் இது வரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. குரூப்-2ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களில் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதே போல், குரூப்4, குரூப்2 தேர்வுகளில் முறைகேடு செய்து பணிக்கு சேர்ந்தவர்கள், இடைத்தரகர்கள் பலர் கைது செய்யப்பட்டு வந்தனர். எனினும், இவற்றுக்கு எல்லாம் மூளையாக செயல்பட்டு பணம் வசூலித்த இடைத்தரகர் ஜெயக்குமாரும், அவருக்கு பணம் வசூலித்து கொடுத்த காவலர் சித்தாண்டியும் கைதாகமல் இருந்தனர். இதில் சித்தாண்டி நேற்று முன் தினம் கைதானார். அவரது மனைவி, தம்பி என்று குடும்பத்திற்குள்ளேயே பலருக்கு முறைகேடாக அவர் வேலை வாங்கிக் கொடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஜெயக்குமார், இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போதுதான், இவர்களுக்கு அரசியல் பின்புலம் உள்ளதா, ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் வெளியே வரும்.

You'r reading டிஎன்பிஎஸ்சி முறைகேடு முக்கிய குற்றவாளி சரண்.. அரசியல் புள்ளிகள் சிக்குமா? Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை