டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்துவதா? மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு

by எஸ். எம். கணபதி, Feb 20, 2020, 13:38 PM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்தினால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று(பிப்.20) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசு தொல்லியல் அலுவலர் பணிக்காக வரும் 29ம் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படவிருந்த போட்டித்தேர்வுகள் சென்னைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும், சென்னையில் மட்டுமே இத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சியின் இம்முடிவு ஏழை மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும்.

சமீபத்தில் நடந்த குரூப்4, குரூப்2ஏ தேர்வுகளில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் விடைத்தாள்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படும் போது திருத்தப்பட்டு, மோசடி செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதேபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் இந்த முடிவைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இரு போட்டித் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை ரத்து செய்து விட்டு, சென்னையில் மட்டும் போட்டித் தேர்வுகளை நடத்தும் தேர்வாணையத்தின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆணைய நிர்வாகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த இரு போட்டித் தேர்வுகளையும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதக் கூடும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் செல்வதானால், அதற்காக ஒரு நாள் முன்னதாகவே சென்னைக்கு வர வேண்டும். சென்னையில் ஏதேனும் விடுதியில் தங்க வேண்டும். இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். இது கிராமப்புற, ஏழை மாணவர்களால் சாத்தியமாகுமா? என்பதை பணியாளர் தேர்வாணையம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, சென்னைக்கு வந்து செல்வதால் ஏற்படும் நேர விரயம், மன உளைச்சல் ஆகியவையும் மாணவர்களின் தேர்வுத் திறனைப் பாதிக்கும். போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்ற ஆணையத்தின் எண்ணம் வரவேற்கத்தக்கதே. அதற்காகக் கண்காணிப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வலுப்படுத்த வேண்டுமே தவிர, மாணவர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள மையங்களில் தேர்வு எழுதும் வாய்ப்புகளைப் பறிக்கக்கூடாது. எனவே, கால்நடை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர், தொல்லியல் அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுகளை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடத்துவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளைச் சென்னையில் மட்டும் நடத்துவதா? மருத்துவர் ராமதாஸ் எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை