பாஜகவுக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி.. அதிமுகவை விளாசிய ஸ்டாலின்

by எஸ். எம். கணபதி, Feb 20, 2020, 13:57 PM IST

பாஜக ஆட்சிக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு, சிஏஏ சட்டத்திற்கு வக்காலத்து வாங்குகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டசபை நிதிநிலை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று(பிப்.20), திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டசபையில் 2 பிரச்சினைகளை எழுப்பினோம். ஓ.பி.எஸ் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கட்சித் தாவல் விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுத்து அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதை அவையில் எழுப்பினோம். ஆனந்தவிகடன் பத்திரிகையில், ஒரு தீர்ப்பு, பல கேள்விகள் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் வந்துள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சரை மாற்ற வேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்தார்கள். அதற்காக அவர்களின் பதவியைச் சபாநாயகர் பறித்தார். ஆனால், இந்த ஆட்சியை எதிர்த்து வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அதே போல், நீதித்துறைக்கும் சில கேள்விகள் எழுப்பியுள்ளார்கள். ஒரு கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பதில் நீதிமன்றம் ஏன் வெவ்வேறு தீர்ப்புகளை அளிக்கிறது என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதைத்தான் அவையில் எழுப்பினோம்.
அடுத்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) எதிர்த்து தனித்தீர்மானம் கொடுத்துள்ளோம். அது குறித்து பல முறை அவையில் எழுப்பினோம். ஆனால், சபாநாயகர் அது ஆய்வில் இருக்கிறது என்று தட்டிக் கழித்து வந்தார். பல மாநிலங்களில் சிஏஏவை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்தவர்களே இப்போது அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதைச் சொன்னால், இதற்கு முதலமைச்சர் பதிலளிப்பதற்குப் பதிலாக வருவாய்த் துறை அமைச்சர் ஏதோ பொதுக் கூட்டத்தில் பேசுவது போல் வீராவேசமாகப் பேசுகிறார். நாங்கள் வாக்குவங்கிக்கு அலைந்து கொண்டிருப்பதாகக் கூறுகிறார். வாதத்திற்கு அதை அப்படியே வைத்துக் கொள்வோம். நாங்கள் வாக்குவங்கிக்கு அலைந்து கொண்டிருக்கிறோம் என்று. நீங்கள் ஏன் இந்த சட்டத்திற்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள்? பாஜக ஆட்சிக்குப் பயந்து, அஞ்சி நடுங்கி, கைக்கட்டி, வாய் பொத்தி இருப்பது ஏன்? ஏனென்றால், உங்கள் வண்டவாளங்களை எல்லாம் அவர்கள் கையில் வைத்திருக்கிறார்கள். அதையெல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விடுவார்கள் மட்டுமல்ல, எல்லோரும் மொத்தமாகச் சிறைச் சாலைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்பதால், பாஜகவைப் பார்த்துக் கும்பிடு போட்டு காலில் விழுந்து கிடக்கிறார்கள்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

You'r reading பாஜகவுக்குப் பயந்து, நடுங்கி, கைக்கட்டி வாய் பொத்தி.. அதிமுகவை விளாசிய ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை