தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு தடம் பதித்தவர்.. அன்பழகனுக்கு முதல்வர் புகழஞ்சலி

by எஸ். எம். கணபதி, Mar 7, 2020, 13:21 PM IST

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலை 1.10 மணியளவில் மரணம் அடைந்தார். திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
பேராசிரியர் க.அன்பழகன் தனது இளம் வயதிலேயே அரசியலில் அதிக ஆர்வம் கொண்டவர். கலைஞர் கருணாநிதி அவர்களின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகாத உறுதி மிக்க மூத்த அரசியல்வாதியாகவும் விளங்கியவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஆரம்பக் காலம் முதலே முக்கிய பங்கு வகித்தவர் என்ற பெருமைக்குரியவர்.
பேராசிரியர் க.அன்பழகன் 1957ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக முதன் முறையாகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அடியெடுத்து வைத்தவர். பேராசிரியர் க.அன்பழகன் 43 ஆண்டுகளாக திமுக பொதுச் செயலாளராகவும். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதித்து வந்தவர். ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

இவர் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். அரசியல்வாதி, ஆசிரியர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி, சமூக சீர்திருத்தவாதி போன்ற பல பரிமாணங்களைக் கொண்டு தனது பன்முகத் தன்மையை வெளிப்படுத்தியவர்.
அன்பழகன் மறைவு தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், க.அன்பழகன் மறைவுக்கு வைகோ, விஜயகாந்த் உள்பட அனைத்து கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You'r reading தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு தடம் பதித்தவர்.. அன்பழகனுக்கு முதல்வர் புகழஞ்சலி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை