ரயில், விமானச் சேவை மே31 வரை வேண்டாம்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

Dont start train and air service till may 31, C.M. asks P.M.

by எஸ். எம். கணபதி, May 12, 2020, 10:11 AM IST

தமிழகத்தில் கொரோனா பரவுவது அதிகரித்து வருவதால், மே 31ம் தேதி வரை ரயில், விமானச் சேவைகளை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலையில் மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்தபடியே இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரிடம் கூறியதாவது :தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்கான பி.சி.ஆர். கருவிகளை அதிகமாக வழங்க வேண்டும். புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு வந்திருந்த 13,284 தொழிலாளர்களையும், மருத்துவச் சிகிச்சைக்காக வந்திருந்தவர்களையும் 12 ரயில்கள் மூலம் திருப்பி அனுப்பியிருக்கிறோம். மேலும், பல தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகளின் விருப்பப்படி 17ம் தேதிக்குள் 61 ரயில்கள் மூலம் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.


தமிழகத்தில் தினமும் 134 விவசாய சந்தைகள் மற்றும் 9,200 நடமாடும் சந்தைகள் மூலம் 5,700 டன் காய்கறிகள், பழங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு செல்வதற்கு விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்குப் போக்குவரத்து மானியத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.மே 12ம் தேதி முதல் டெல்லியிலிருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. அதே சமயம், சென்னையில் கொரோனா தொற்று பரவுவது அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மே31ம் தேதி வரை தமிழகத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்தை அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தரப்பட்ட ரூ.312 கோடி முழுமையாகச் செலவழிக்கப்பட்டு விட்டது. அதனால், மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி சிறப்பு மானியத்தை உடனே வழங்க வேண்டுகிறேன்.

2019-20-ம் நிதி ஆண்டுக்கு அனுமதிக்கப்பட்ட 33 சதவீத கூடுதல் கடன் உச்சவரம்பை 2020-21-ம் நிதி ஆண்டுக்கும் அனுமதிக்க வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ள 2020-21-ம் ஆண்டுக்கான நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 சதவீதத்தை உடனே வழங்க வேண்டும்.

மருந்துகள், தடுப்பு உபகரணங்களுக்கான செலவு, புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை அனுப்புவதற்கான செலவு ஆகியவற்றுக்காகத் தேசிய பேரிடர் நிவாரண தொகையிலிருந்து ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். நெல் கொள்முதலுக்கு வசதியாக நெல் அரவை மானிய தொகையாக ரூ.1,321 கோடி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்டு கடன் திட்ட இலக்கை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக 2020-21-ம் ஆண்டில் உயர்த்த வேண்டும். அவர்களது கடன் தவணைத் தொகையை வரும் டிசம்பர் 31-ம் தேதிவரை வரை திருப்பிச் செலுத்தாத வகையில் அவகாசம் வழங்க வேண்டும். இந்த தொழில்களுக்கு புதிய முதலீட்டு நிதி உதவிகளை வழங்க வேண்டும். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்துக்கு மறு நிதி ஆதாரமாக ரூ.2,500 கோடி வழங்கப்பட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

You'r reading ரயில், விமானச் சேவை மே31 வரை வேண்டாம்.. பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை