சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் நீடிக்கும் கொரோனா பரவல்..

corona spread continues in chennai, chengalpat dist.

by எஸ். எம். கணபதி, Aug 6, 2020, 09:55 AM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் நோய் பரவி வருகிறது. சென்னையில் ஒரு லட்சம், செங்கல்பட்டில் 16 ஆயிரம், காஞ்சிபுரத்தில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பாதித்திருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், அந்நோய் பரவலைத் தடுக்க முடியவில்லை. நான்கு மாதங்கள் கடந்தும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.5) ஒரே நாளில் 5175 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 40 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 73,460 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 6031 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 14,815 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 112 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 4461 ஆக உயர்ந்தது.சென்னையில் தினமும் புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1044 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 5004 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.

செங்கல்பட்டில் நேற்று 486 பேருக்கும், காஞ்சிபுரம் 342, மதுரை 104, திருவள்ளூர் 472 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 16,484 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 11,593 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 15,570 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பல மாவட்டங்களில் நேற்று 200 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று வரை 28 லட்சத்து 45,406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 59,156 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 73 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You'r reading சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் நீடிக்கும் கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை