வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கலாம்.. ஐகோர்ட் அனுமதி..

High court permits individuals to ganesha idol immersion.

by எஸ். எம். கணபதி, Aug 21, 2020, 13:38 PM IST

வீடுகளில் வைத்து வணங்கும் மண் பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதற்குச் சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. எனினும், பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் அரசு விதித்த தடை செல்லும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் நாளை(ஆக.22) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது விழாக்கள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்துவோம் என்று சில அமைப்புகள் அறிவித்தன. இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.இந்நிலையில், பத்திரிகையாளர் அன்பழகன், சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தார். அதில், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர். அதன்பின் நீதிபதிகள், “அரசு உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எதைத் தமிழக அரசு எடுக்கும் என்று நம்புவதாகத் தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.இதற்கிடையே, மதுரை ஐகோர்ட் கிளையில் இதே போல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று தீர்ப்புக் கூறியிருந்தது.இதைத் தொடர்ந்து, கணபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் புதிதாக ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில் மக்களின் மத உணர்வுகளை மதித்து, வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டுமென்று கோரினார். இது பற்றி, தமிழக அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜரானார். அவர் வாதிடுகையில், விநாயகர் சிலைகளை மெரினா கடலில் கரைப்பதற்கு ஏற்கனவே தடை உள்ளது. தனிநபர்கள் விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்க அனுமதித்தால், கூட்டம் சேரும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு மக்கள் எடுத்துச் சென்று கரைக்கலாம். 2 பேர் மட்டுமே ஒரு சிலையை எடுத்துச் செல்ல வேண்டும். நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரையான மெரினா கடலில் கரைக்க அனுமதியில்லை. பட்டினப்பாக்கம் உள்பட மற்ற பகுதிகளில் கடலிலும், ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளிலும் கரைக்கலாம். அதே சமயம், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், விநாயகர் ஊர்வலங்களை நடத்துவதற்கும் அரசு பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.

You'r reading வீடுகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கலாம்.. ஐகோர்ட் அனுமதி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை