தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 40 ஆயிரம் பேர்.. 11 மாவட்டங்களில் நீடிக்கும் பாதிப்பு..

New corona cases decreasing in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Oct 17, 2020, 11:27 AM IST

தமிழகத்தில் தற்போது 40 ஆயிரம் பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். 11 மாவட்டங்களில் மட்டுமே தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து பரவி வருகிறது. எனினும், தமிழகத்தில் தற்போது புதிதாகப் பாதிப்பவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த ஒரு வாரமாகப் புதிதாகத் தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. நேற்று 4389 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 79,191 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.
கொரோனா மருத்துவமனைகளிலிருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5245 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 27,703 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 57 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,529 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 40,959 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1140 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 261 பேருக்கும், திருவள்ளூர் 195, காஞ்சிபுரம் 130, கோவையில் 387, ஈரோடு 138, திருப்பூர் 147, நாமக்கல் 132, சேலம் 244, கடலூர் 116, வேலூர் மாவட்டத்தில் 118 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 87,852 பேருக்கும், செங்கல்பட்டில் 40,729 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35,654 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் 87,492 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது வரை மொத்தத்தில் 85 லட்சத்து 19238 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 40 ஆயிரம் பேர்.. 11 மாவட்டங்களில் நீடிக்கும் பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை