3 கோடி ரூபாய் கொடுத்தால் ஆட்சியை கலைத்து விடலாம் - மு.க.ஸ்டாலின் அதிரடி

சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Mar 26, 2018, 11:03 AM IST

சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சரளையில் ஈரோடு மண்டல திமுக மாநாடு 24ஆம் தேதி, 25ஆம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு உரையை நேற்று இரவு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், “பெரியார் மண்ணிலிருந்து நான் பேசுகிறேன். தந்தை பெரியார் அண்ணாவிற்கு துணை நின்ற அந்த மண்ணிலிருந்து நான் பேசுகிறேன். தலைவர் கலைஞர் குருகுல பயிற்சி பெற்ற மண்ணிலிருந்து பேசுகிறேன். எந்த காலத்திலும், எவராலும் வீழ்த்த முடியாத திராவிட கொள்கை வேர் விட்டிருக்குக்கூடிய இந்த மண்ணிலிருந்து பேசுகிறேன்.

லட்சோப லட்சம் தொண்டர்களில் ஒருவனாக, உங்களில் ஒருவனாகவே நான் இருப்பேன். உங்களில் ஒருவன், உங்களால் ஒருவன், உங்களுக்காக ஒருவன். இன்று திமுகவை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் சூழ்ச்சி, சூது செய்கிறது.

மிருக பலத்துடன் ஆட்சியில் இருக்கும் பாஜக திராவிட இயக்கங்களை அழிக்க சதி செய்கிறது. ஊடகங்களில் உட்கார்ந்து கொண்டு ஏளனம் செய்கிறார்கள். ஏகடியம் செய்கிறார்கள். தி.மு.க. என்ன செய்தது என்று கேட்கிறார்கள். இந்த தைரியம், ஆணவம், துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது?.

தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. திமுகவில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது.

இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை. சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading 3 கோடி ரூபாய் கொடுத்தால் ஆட்சியை கலைத்து விடலாம் - மு.க.ஸ்டாலின் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை