தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 27 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் குறைகிறது..

சென்னை உள்பட 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை நூற்றுக்கும் கீழே குறைந்தது.

by எஸ். எம். கணபதி, Oct 28, 2020, 09:11 AM IST

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பரவியது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகமானோருக்குப் பரவியது. கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்கு இதே போல் நீடித்து வந்தது.

செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.இதன்பின், தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று(அக்.27) 2572 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14,235 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4024 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 75,578 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 27 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,983 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 27,734 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 695 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 144 பேர், திருவள்ளூர் 115, கோவையில் 209, சேலம் மாவட்டத்தில் 146 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த 5 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 99 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்பட சில மாவட்டங்களில்தான் 50க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் அதற்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 97,077 பேருக்கும், செங்கல்பட்டில் 42,957 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37,364 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,384 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 96 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 70 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் 2,572 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 27 ஆயிரம் பேர்.. தொற்று பரவல் குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை