இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர பிரதமருக்கு வைகோ கடிதம்..

by எஸ். எம். கணபதி, Nov 9, 2020, 12:25 PM IST

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அழிக்கச் சொல்லும் இலங்கை நீதிமன்ற உத்தரவுக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு இலங்கை அரசிடம் இழப்பீடு வாங்கித் தருமாறு பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியைத் தங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கைக் கடற்படை அத்துமீறி வந்து, தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தி 600 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொன்றது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான மீனவர்களை பிடித்துக் கொண்டு போய் இலங்கைச் சிறைகளில் அடைத்தனர். அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்தனர்.

ஒவ்வொரு மீன்பிடிப் படகும் 25 முதல் 40 லட்சம் ரூபாய் பெறுமானவை. தமிழக மீனவர்கள் கடன் வாங்கி, அதற்காக வட்டி கட்டி வருகின்றார்கள். அந்தப் படகுகள்தான் அவர்களது வாழ்வாதாரம். இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்குமாறு கோரி, நான் தொடர்ச்சியாகத் தங்களிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்துள்ளேன். ஆனால், பயன் எதுவும் இல்லை. ஆணை பிறப்பித்து உள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.எனவே, இந்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, அந்தப் படகுகளை மீட்டுத் தர வேண்டும். அல்லது, அதற்கு இழப்பு ஈட்டுத் தொகை பெற்றுத் தர வேண்டும். தாங்கள் இந்தப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் வைகோ இதே போல் கடிதம் அனுப்பியுள்ளார்.

You'r reading இலங்கையில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர பிரதமருக்கு வைகோ கடிதம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை