சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு.. சென்னையிலும் குறைகிறது..

by எஸ். எம். கணபதி, Nov 13, 2020, 09:51 AM IST

சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பரவி, 75 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். பல மாநிலங்களில் நோய் பரவல் கட்டுப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது. நேற்று(நவ.12) மாநிலம் முழுவதும் 77,317 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2112 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 52,521 பேராக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2347 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 22,686 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 25 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,440 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாக குறைந்து வருகிறது. காஞ்சிபுரம்(97), சேலம்(66), ஈரோடு(65), திருப்பூரில்(89) நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் சராசரியாக 50, 60 பேருக்குத்தான் நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 18,395 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் தினமும் சுமார் 1800 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர்.

அக்டோபர் கடைசி வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து, நேற்று 565 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 148 பேர், திருவள்ளூர் 120, கோவையில் 190 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 7173 பேருக்கும், செங்கல்பட்டில் 45,875 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,337 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,553 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 77 ஆயிரமாக அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading சேலம், ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சரிவு.. சென்னையிலும் குறைகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை