தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 15 ஆயிரம் பேர்.. 3 மாவட்டங்களில் புதிய பாதிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 17, 2020, 09:28 AM IST

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே நேற்று புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.இந்தியாவில் இது வரை 88 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இதில், 82 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து விட்டனர். ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாகக் குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்குக் கீழ் சென்றிருக்கிறது.நேற்று(நவ.16) மாநிலம் முழுவதும் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1725 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 59,916 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2384 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 32,656 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 15 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,495 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 83 பேர், காஞ்சிபுரம் 79, சேலம்74, ஈரோடு 64 பேருக்கும் நேற்று புதிய பாதிப்பு நூற்றுக்கும் கீழ் குறைந்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவான பேருக்குத்தான் நேற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 15,765 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு புதிதாக 1800 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அக்டோபர் கடைசி வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து, நேற்று 497 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 பேர், கோவையில் 174 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 9167 பேருக்கும், செங்கல்பட்டில் 46,027 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,696 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,822 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 15 ஆயிரம் பேர்.. 3 மாவட்டங்களில் புதிய பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை