பீகார் தேர்தலிலும் தோல்வி.. காங்கிரசில் மீண்டும் சலசலப்பு.. கபில்சிபல் கொளுத்தி போட்டார்..

by எஸ். எம். கணபதி, Nov 17, 2020, 09:36 AM IST

பீகார் தோல்வியையும் வழக்கம் போல் சாதாரணமாக விட்டு விடுவீர்களா? என்று காங்கிரஸ் தலைமையை விமர்சித்து மூத்த தலைவர் கபில்சிபல் ட்வீட் செய்தது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக கங்கணம் கட்டி செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம்நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் இணைந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், கடந்த ஆக.24ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

அதில், சோனியா காந்தி பேசும் போது, தான் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். அப்போது சலசலப்புகள் ஏற்பட்டு கடைசியில் சோனியாவே இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார்.இந்நிலையில், பீகாரில் ஆர்ஜேடி கட்சியுடன் மெகா கூட்டணி அமைத்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றது. இது காங்கிரசின் பலவீனத்தை மேலும் தெளிவாகச் சித்தரித்துக் காட்டுகிறது. இதையடுத்து, மூத்த காங்கிரஸ் தலைவர் கபில்சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில்,பீகார் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. இந்த முறையும் வழக்கம் போல் எதையும் கண்டு கொள்ளாமல் கட்சித் தலைமை இருக்கப் போகிறதா? கட்சியின் நலனுக்கா நான் பேச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

இதை ஆமோதிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம், கட்சி ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதற்கான நேரம் இதுதான். ஆலோசனைகளை நடத்திச் செயல்பட வேண்டிய நேரம் என்று பதிவிட்டார். மேலும் சிலரும் இதே போல் கபில்சிபலை ஆதரித்துப் பதிவிட்டனர்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கபில்சிபல் இது போன்று உட்கட்சி விவகாரங்களைப் பகிரங்கமாகப் பேச வேண்டியதில்லை. இதற்கு முன்பு 1969, 1977, 1989, 1996ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மிகப் பெரிய வீழ்ச்சிகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் தலைமையின் மீதான நம்பிக்கையால் ஒவ்வொரு முறையும் மீண்டு, பலம் பெற்றிருக்கிறோம். எனவே, மீடியாவில் பேசுவது பலவீனத்தைத்தான் ஏற்படுத்தும் என்று ட்விட்களை பதிவிட்டார்.

கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் தனது ட்வீட்டில், கபில்சிபல் மத்திய அமைச்சராகவும், டெல்லி எம்.பி.யாகவும் இருந்துள்ளார். ஆனாலும், அவர் டெல்லி அரசியலில் கட்சியை வளர்ப்பது பற்றிக் கவலைப்படாமல் சில காலம் ஒதுங்கியிருந்தார். அதையும் அவர் மறக்கக் கூடாது. அவர் வெளிப்படையாகப் பேசுவது பாஜகவுக்குத்தான் பலனளிக்கும் என்று போட்டுத் தாக்கினார். இப்படியாக மாறி, மாறி சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே, அகமது படேல், ஏ.கே.அந்தோணி, அம்பிகாசோனி, ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புக் குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பீகார் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கவுள்ளனர்.

You'r reading பீகார் தேர்தலிலும் தோல்வி.. காங்கிரசில் மீண்டும் சலசலப்பு.. கபில்சிபல் கொளுத்தி போட்டார்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை