தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு தொடர்ந்து சரிவு..

by எஸ். எம். கணபதி, Nov 26, 2020, 16:23 PM IST

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் பல நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 92 லட்சத்து 66,706 பேருக்கு பரவியிருக்கிறது. இந்நோய்க்கு இது வரை ஒரு லட்சத்து 35,223 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 44,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 524 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலும் கட்டுப்பட்டு விட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்கு பின்பு படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு தொற்று பரவியது.

மாநிலம் முழுவதும் நேற்று(நவ.25) 67,458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 1534 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 79,176 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1873 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 51,535 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 16 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,655 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது அதுவும் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 467 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. கோவை மாவட்டத்தில் நேற்று 149 பேருக்கு தொற்று பாதித்தது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கும், திருவள்ளூர் 89, காஞ்சிபுரம் 63, ஈரோடு 72, திருப்பூர் மாவட்டத்தில் 77 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களுக்கே நேற்று தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 13,417 பேருக்கும், செங்கல்பட்டில் 47,180 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 40,599 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27,414 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் தற்போது 11,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 11 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு தொடர்ந்து சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை