தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்து விட்டது.. ரஜினி பேட்டி முழு விவரம்..

by எஸ். எம். கணபதி, Dec 3, 2020, 15:02 PM IST

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. மக்களுக்காக எனது உயிரையும் கொடுப்பேன். எல்லாத்தையும் மாத்துவோம். இப்ப இல்லேன்னா... எப்பவும் இல்லே... என்று ரஜினி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் கடந்த நவ.30ம் தேதி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், ரஜினிகாந்த் அன்று அளித்த பேட்டியில், மன்ற நிர்வாகிகள், நான் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தெரிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று(டிச.3) வெளியிட்ட பதிவு வருமாறு:ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர்31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம்.. எல்லாத்தையும்.. மாத்துவோம். இப்போது இல்லேன்னா எப்பவும் இல்ல.வரப் போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும் !!! இவ்வாறு கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் வழக்கம் போல் தனது வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நான் கடந்த 2017 டிசம்பரில் புதிய கட்சி தொடங்குவேன் என்று அறிவித்திருந்தேன். ஆனால், கொரோனா காரணமாகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை. கொரோனா பாதிப்பு வராமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்க வேண்டும். எனக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளதால், பொது மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரம் செய்வது மெடிக்கலி ஆபத்து என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.நான் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களால்தான் உயிர் பிழைத்து வந்தேன். அதனால், அவர்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நான் கொடுத்த வாக்குறுதியில் தவற மாட்டேன்.

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தாகணும். எல்லாத்தையும் மாத்துவோம். நான் ஒரு கருவிதான். மக்கள்தான் எல்லாத்தையும் மாத்தணும்.நான் ஒப்பந்தம் செய்துள்ள படத்தை முடித்து கொடுத்து விட்டு வருவேன். எனது கட்சிக்கு மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனை நியமித்துள்ளேன். தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியை நியமித்துள்ளேன். எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே..இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

தமிழருவி மணியன் பேசும் போது, ரஜினி ஐயா தனக்குச் செல்வாக்கு, புகழ் தேடித்தந்த மக்களுக்கு நன்றிக் கடன் ஆற்ற வேண்டுமென்று விரும்புகிறார். தமிழ்நாட்டில் உள்ள வெறுப்பு அரசியலை விட்டு, அன்பால் ஆராதிக்கிற ஆன்மீக அரசியலை ரஜினி கொண்டு வருவார். மருத்துவர்களின் எச்சரிக்கையைப் புறந்தள்ளி விட்டு, அவர் மக்களுக்காக பணியாற்ற வந்துள்ளார். தமிழகத்தில் மாற்று அரசியலைக் கொண்டு வருவார். அதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்று தெரிவித்தார்.

You'r reading தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்து விட்டது.. ரஜினி பேட்டி முழு விவரம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை