சென்னையில் தொடரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 346 பேருக்கு தொற்று..

by எஸ். எம். கணபதி, Dec 7, 2020, 10:11 AM IST

தமிழ்நாட்டில் இது வரை 7 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. சென்னை, கோவை மாவட்டங்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பரவி வருகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்குப் பிறகு நாள்தோறும் தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து தற்போது நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500க்கு கீழ் சென்றுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் நேற்று(டிச.6) 1323 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 90,240 பேராக உள்ளது.

மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1398 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 67,659 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 16 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,788 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னையில் நேற்று 346 பேருக்கும், கோவையில் புதிதாக 135 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் 66 பேருக்கும், ஈரோடு 57, திருப்பூர் 72, சேலத்தில் 62 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று புதிதாக 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 17,542 பேருக்கும், செங்கல்பட்டில் 48,159 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41,349 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று 70 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading சென்னையில் தொடரும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 346 பேருக்கு தொற்று.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை