சாதிவாரியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு அரசியல்கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டுமென்று வைத்து வரும் கோரிக்ககைகளின் அடிப்படையிலும், அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து பிரிவினருக்கும் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையிலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீட்டு வழக்கை எதிர்கொள்ளத் தேவையான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று டிசம்பர் 1ம் தேதி அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, சாதிவாரியான முழுமையான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை முடிவு செய்து, அந்த புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்படும். இது உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.














