சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா..

by எஸ். எம். கணபதி, Dec 9, 2020, 09:31 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை 98 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. அதற்குப் பின்பு படிப்படியாகக் குறைந்து தற்போது நாளொன்றுக்குத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300க்கு வந்துள்ளது.

தமிழக அரசு நேற்று(டிச.8) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1236 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 92,788 ஆக உள்ளது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1330 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 70,378 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 13 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,822 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,588 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

சென்னையில் நேற்று 333 பேருக்கும், கோவையில் புதிதாக 122 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. திருவள்ளூரில் 60 பேருக்கும், செங்கல்பட்டில் 70, காஞ்சிபுரத்தில் 39, திருப்பூர் 73, சேலத்தில் 64 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 18,198 பேருக்கும், செங்கல்பட்டில் 48,330 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 41,468 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் நேற்று 65 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை