தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர்..

by எஸ். எம். கணபதி, Dec 19, 2020, 09:29 AM IST

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர் உள்ளனர். சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிய பாதிப்பு குறைந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேகமாகப் பரவியது. கடந்த அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புதிய நோய்ப் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழக அரசு நேற்று(டிச.18) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1134 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 4650 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1170 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 82,915 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,954 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9781 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை, கோவை மாவட்டங்களில் நேற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி போன்ற பல மாவட்டங்களில் தொற்று பரவல் கட்டுப்பட்டுள்ளது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கும், செங்கல்பட்டில் 48 ஆயிரம் பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 9781 பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை