தேஜஸ் ரயிலை ரத்து செய்வதா? ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்..

by எஸ். எம். கணபதி, Dec 30, 2020, 13:35 PM IST

மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தும் முடிவை கைவிடுமாறு ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். ரயில்வே துறை அமைச்சருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: மதுரை- சென்னைக்கு இடையில் இயங்கும் தேஜஸ் விரைவு வண்டிகளை ஜனவரி 4ம் தேதி முதல் ரத்து செய்யப் போவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். குறைவான பயணிகள் வருவதால் ரத்து செய்வதாக கூறுவதை ஏற்கமுடியாது. சேவைத் துறையான ரயில்வே, இதுவரை பின்பற்றி வந்த கொள்கையிலிருந்து பின்வாங்கி லாபத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது ஏற்ககூடியது அல்ல. இது கொள்ளை நோய் காலம். மக்கள் கூட்டமாக செல்வது தவிர்க்கவேண்டிய ஒன்று. இந்த சூழ்நிலையில் முழு அளவில் பயணிகள் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதுவும் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பயணம் கோவிட் தொற்று சார்ந்த அச்சங்களை அதிகம் கொண்டது.

அப்படி இருந்தும் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்கு மேல் பயணிகள் வருகை இருப்பதாக அறிகிறோம். மிகவும் தேவையான பயணங்களை மட்டும் மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசே அறிவித்து வருகிறது. எனவே, அவசியமான மக்கள் மட்டுமே பயணிக்கின்றனர். இன்னொரு காரணம் கட்டுப்படியாகாத கட்டணமாகும். இதே தடத்தில் ஓடக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ் கட்டணத்தை விட இதன் கட்டணம் 35% அதிகமாகும். ( குளிர்சாதன பெட்டி இருக்கை கட்டணம் வைகை ரூ.685, தேஜஸ் ரூ.920) இதை கணக்கில் எடுத்து சீசன் காலத்தில் கட்டணத்தை குறைப்பது போல இப்போது கட்டணத்தை நியாயமான அளவுக்கு வைக்க வேண்டும். தனியார் வண்டிகளை அனுமதிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தனியார் வண்டிகள் லாபம் இல்லை என்றால் ரத்து செய்வார்கள் எனவே தனியாரை அனுமதிக்கக்கூடாது என்பது நாங்கள் சொல்லும் காரணமாகும்.

இப்போது தனியாரை போலவே லாப நோக்கோடு ரயிலை ரத்து செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. மக்கள் நலனுக்கு விரோதமானது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் போலவே சென்னையிலிருந்து கோயம்புத்தூர் பெங்களூர் ஆகிய நிலையங்களுக்கு ஓடிக்கொண்டிருந்த சதாப்தி எக்ஸ்பிரஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றிற்கும் அதே காரணம் கூறப்பட்டுள்ளது. டெல்லிக்கும் லக்னோவுக்கும் மும்பைக்கும் அகமதாபாதுக்கும் இடையே ஓடிவந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். இது தனியார்மயமானால் என்ன ஆகும் என்பதற்கு முன் அறிவிப்பாகும். கொள்ளைநோய் காலத்தில் அவசர காரணங்களுக்கு பயணம் செய்யும் சாதாரண மக்களை கருத்தில் கொண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ்களை ரத்து செய்வதை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதைப்போல கோவை பெங்களூர் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் களையும் மீண்டும் இயக்க வேண்டும். இதே காரணத்துக்காக பயணிகள் ரயிலை தனியாருக்கு விடும் திட்டத்தை கைவிடவும் கோருகிறேன். இவ்வாறு வெங்கடேசன் கூறியுள்ளார்.

You'r reading தேஜஸ் ரயிலை ரத்து செய்வதா? ரயில்வே அமைச்சருக்கு மதுரை எம்.பி. கடிதம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை