சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பு 200 ஆக குறைந்தது..

by எஸ். எம். கணபதி, Jan 9, 2021, 09:30 AM IST

தமிழகத்தில் சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.சீனாவில் இருந்து பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடி 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தொற்று பரவல் குறையத் தொடங்கியது. தற்போது வரை மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக அரசு நேற்று(ஜன.8) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 64 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 790 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களைச் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 24,776 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 897 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 5136 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 8 பேர் பலியானார்கள்.

இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,208 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7432 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.சென்னை(208பேர்), கோவை(79பேர்), செங்கல்பட்டு(58) மாவட்டங்களில் மட்டும் நேற்று புதிதாக 50க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், விழுப்புரம் ஆகிய 14 மாவட்டங்களில் புதிதாகத் தொற்று பாதிப்பு 10க்கும் கீழ் குறைந்துள்ளது. அதே சமயம், தற்போது இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இது வரை அந்நாட்டில் இருந்து வந்த 20 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

You'r reading சென்னையில் புதிதாக கொரோனா பாதிப்பு 200 ஆக குறைந்தது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை