24 வருஷமா பதிவு பண்ணியும் வேலை வரல.. வாலிபர் வைத்த பேனர்..

by எஸ். எம். கணபதி, Feb 15, 2021, 12:27 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்காத இளைஞர் ஒருவர் வித்தியாசமாக பேனர் வைத்துள்ளார். நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு பல்வேறு தனியார் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு வேலைக்கு மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படுகிறது. வேலையில்லா இளைஞர்கள் இங்கு பதிவு செய்து, பதிவு மூப்பு அடிப்படையில் அரசு வேலைக்கு அழைப்பு வரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக அல்லது ஆளும்கட்சிக்கு சில லட்சங்களை லஞ்சமாக கொடுத்துதான் அரசு வேலைக்கு போக முடியும் என்பது எழுதப்படாத விதி ஆகி விட்டது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்து பதிவு மூப்பு பெற்றுள்ள ஒரு இளைஞர் வித்தியாசமாக பேனர் வைத்திருக்கிறார். அதில், புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடர்ந்து 24ம் ஆண்டாக பதிவு மூப்பை புதுப்பித்த எங்கள் இனிய நண்பர் கே.ஆனந்தராஜ், பதிவு எண் pdd1997moooo3852, செல்-9566593221 அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு கீழே பின்குறிப்பு என்று போட்டு, இது வரை நலம் விசாரித்து கூட கடிதம் வந்தது இல்லை, இப்படிக்கு வேலை இல்லாத இளைஞர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading 24 வருஷமா பதிவு பண்ணியும் வேலை வரல.. வாலிபர் வைத்த பேனர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை