சிபிஐ ரெய்டு.. தமிழகத்திற்கு தலைகுனிவு- ஸ்டாலின் வருத்தம்

டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு

Sep 5, 2018, 17:16 PM IST

சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தமிழகத்திற்கு தலைகுனிவு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

MK Stalin

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், " தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், முன்னாள் சென்னை மாநகர ஆணையர் திரு ஜார்ஜ், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்ட குட்கா ஊழல் டைரியில் இடம் பெற்றுள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் இல்லங்களிலும், சி.பி.ஐ ரெய்டு நடத்தியிருப்பதை வரவேற்கிறேன்.

குட்கா ஊழலை மறைக்க,அதிமுகவின் மூன்று முதலமைச்சர்களும், இரு தலைமைச் செயலாளர்களும், லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகளும் எவ்வளவோ முயன்றும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்றைக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, இப்போது அதிரடியாக 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டுகள் நடைபெற்றுள்ளன என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தேதி வாரியாக குட்கா குடோன் அதிபரிடமிருந்து மாமூல் பெற்ற போலீஸ் அதிகாரிகளையும், அமைச்சர் திரு விஜயபாஸ்கரையும் காப்பாற்றுவதற்காக,வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் பற்றி விசாரிக்க நினைத்த டி.ஜி.பி. திரு அசோக்குமாரை இரவோடு இரவாக பதவி விலக வைத்து, ஆட்சியினர் மிகவும் கேவலமாக நடந்து கொண்டார்கள்.

அந்த கடிதத்தை காணாமல் அடித்த தலைமைச் செயலாளர் திரு ராம்மோகன்ராவை, வெட்கம் ஏதுமின்றிக் காப்பாற்றினார்கள். பிறகு அந்த வருமான வரிக் கடிதம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று,தலைமைச் செயலாளார் திருமதி கிரிஜா வைத்தியநாதன் அவர்களே உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் அவலம் அரங்கேறியது.

அதையும் மீறி, மதுரை உயர்நீதிமன்றக் கிளை “குட்கா விசாரணைக்கு”உத்தரவிட்டு, “சுதந்திரமான விஜிலென்ஸ் கமிஷனரை நியமிக்க வேண்டும்”என்று உத்தரவிட்டது. விசாரணை,அமைச்சரையும், டி.ஜி.பி.க்களையும் நெருங்கி விடுமோ என்று கருதி,விஜிலென்ஸ் ஆணையராக நியமிக்கப்பட்ட திரு வி.கே. ஜெயக்கொடி அவர்களையும், அவர்நேர்மையானவர் என்பதால்,மாற்றினார்கள்.

வருமான வரித்துறை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் திரு விஜயபாஸ்கர், டி.ஜி.பி.க்கள் ஆகியோரைக் காப்பாற்றுவதற்காக, குட்கா ஊழல் டைரியில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சென்னை மாநகர காவல் ஆணையரான திரு ஜார்ஜ் மூலமாகவே “கீழ் நிலை காவல்துறை அதிகாரிகளை மட்டும் குட்கா ஊழல் தொடர்பாக குற்றம் சாட்டி”ஒரு கடிதம் எழுத வைத்தார்கள்.

Gutka Scam

வருமான வரித்துறை கடிதத்தை காணாமல் அடித்து விட்டு, ஆணையராக இருந்த திரு ஜார்ஜின் கடிதத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த லஞ்ச ஊழல் தடுப்புத் துறை “ அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பிக்கள் ஆகியோரின்”பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் உள்நோக்கத்துடன், சேர்க்கவில்லை.

பிறகு நடைபெற்ற விசாரணையில் டி.ஜி.பி.க்கள் மற்றும் அமைச்சர் பெயரை சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடி உருவான போது,லஞ்ச ஊழல் தடுப்புத்துறை இயக்குனராக இருந்த திரு மஞ்சுநாதா என்ற கூடுதல் டி.ஜி.பி.யை அங்கிருந்து தூக்கியடித்தார்கள். குட்கா ஊழல் வழக்கை திசைதிருப்ப, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க , தற்போது முதலமைச்சராக இருக்கும் திரு எடப்பாடி பழனிச்சாமி எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டார்.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பை எதிர்த்து சுகாதாரத்துறையில் உள்ள ஒரு கடை நிலை ஊழியரை வைத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ,தடுப்பதற்கு முதலமைச்சர் துணை போனார்.

ஆனால் அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததால் ,இப்போது சி.பி.ஐ., குட்கா வழக்கில் குட்கா குடோன் அதிபர் மாதவராவ் உள்ளிட்டவர்களை விசாரித்துள்ளது. அதில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் ,காவல்துறை அதிகாரிகள் மீதும், சுகாதாரத்துறை அமைச்சர் மீதும் ரெய்டு நடத்தியிருக்கிறது. ஆகவே குட்கா அதிபரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், ஆரம்பகட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த சி.பி.ஐ. ரெய்டு நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர், அப்போது சென்னை மாநகர ஆணையராக இருந்த திரு ஜார்ஜ், இப்போது டி.ஜி.பி.யாக இருக்கும் திரு டி.கே. ராஜேந்திரன் ஆகியோரின் மீது குட்கா டைரி, குட்கா குடோன் அதிபர் வாக்குமூலம் மற்றும் தற்போதையை சி.பி.ஐ. ரெய்டு மூலம் ஆகியவற்றின் அடிப்படையில் ஊழலுக்கான ஆரம்பகட்ட ஆதாரம் வெளிவந்துள்ளது.

குட்கா ஊழல் புரிந்ததற்காக ரெய்டு செய்யப்பட்டுள்ள அமைச்சர் திரு விஜயபாஸ்கர் அமைச்சரவையிலும், திரு டி.கே. ராஜேந்திரன் புகழ்மிக்க தமிழக காவல்துறையின் தலைவராகவும் இனியும் நீடிப்பதும் ஒரு நிமிடம் நீடித்தாலும் அது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நேர்மை -நியாயத்திற்கும், காவல்துறை நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழுக்காகவும், துடைக்க முடியாத கறையாகவும் அமைந்து விடும்.

ஆகவே சுகாதாரத்துறை அமைச்சரும், டி.ஜி.பி.யும் தங்கள் பதவிகளை அவர்களாகவே முன்வந்து உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்யவில்லையென்றால் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள், அமைச்சர் திரு,விஜயபாஸ்கரையும், தமிழ்நாடு டி.ஜி.பி. திரு.டி.கே. ராஜேந்திரனையும் எவ்வித காலதாமதமுமின்றி டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

You'r reading சிபிஐ ரெய்டு.. தமிழகத்திற்கு தலைகுனிவு- ஸ்டாலின் வருத்தம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை