ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்பு!

Poland climate change conference: PasumaiThayagam participation

by Devi Priya, Dec 9, 2018, 19:00 PM IST

காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில் ( Climate Change Conference 2018) பசுமைத் தாயகத்தின் செயலர் இரா.அருள் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை;

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து, அதனால் பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் என பல தீங்குகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. 2015 ஆம் ஆண்டில் பாரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் ஆக குறைத்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது என்றும், உலகின் 180 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

பாரிஸ் காலநிலை உடன்படிக்கை 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. 2018 ஆம் ஆண்டிற்குள் இதற்கான விதிமுறைகளை (Paris Rulebook) வகுக்க வேண்டும் என்பது ஐநா விதிமுறை ஆகும். இதற்கான ஐநா காலநிலை மாநாடு போலந்தின் கடோவைஸ் நகரில் டிசம்பர் 2ம் தேதி தொடங்கியுள்ளது. 14ம் தேதி வரை இம்மாநாடு நடைபெறவுள்ளது.

உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும், 190 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கும் இந்த மாநாட்டில் ஐநா அவையின் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசனை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பு கலந்துகொள்கிறது.

அடுத்த பத்தாண்டுகளுக்குள் மிக வேகமான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு இவற்றின் பயன்பாட்டை பாதியளவுக்கு கீழாக மிக வேகமாக குறைக்க வேண்டும்.

2050 ஆண்டில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம்.

‘அடுத்து வரும் பத்தாண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பலநூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’என்று ஐநா அறிவியலாளர்கள் குழு அறிவித்தது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

You'r reading ஐநா காலநிலை மாநாட்டில் பசுமைத் தாயகம் பங்கேற்பு! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை