முன்பு பெருமாள் முருகன், நடிகர் விஜய் இப்போது வைரமுத்து! - எச்.ராஜவுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று எச்.ராஜாவின் வன்முறை பேச்சும், கொலை வெறி மிரட்டல்களும் தொடர்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Jan 13, 2018, 08:53 AM IST

எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று எச்.ராஜாவின் வன்முறை பேச்சும், கொலை வெறி மிரட்டல்களும் தொடர்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்றது.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ”தமிழை ஆண்டாள்” என்ற கவிஞர். வைரமுத்துவின் தினமணி கட்டுரையை முன் வைத்து பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா, வைர முத்து அவர்களையும், கம்யூனிஸ்ட்டுகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளையும், பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்களையும் அநாகரீகமான முறையில் அவதூறு செய்த தோடு வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருக்கிறார்.

மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான எச். ராஜாவின் பேச்சை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதற்கு முன்னரும் எச். ராஜா இதுபோன்று சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கிற, சமூகப் பதற்றத்தை உருவாக்குகிற பலபேச்சுக்களையும், அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். அவரது பேச்சு மாற்றுக் கருத்துள்ள படைப்புகள், பேச்சுக்கள் ஆகியவற்றை முன்வைப்போருக்கு எதிரான நேரடியான மிரட்டலாகவே அமைந்திருக்கிறது.

மாற்றுக் கருத்துக்களை ஆரோக்கியமாக விவாதிப்பதற்கு பதிலாக கொலைவெறியைத் தூண்டும் வகையில் அவர் தொடர்ச்சியாக பேசி வருவதை திட்டமிட்ட முறையில் தமிழகத்தில் சாதி, மத மோதலை உருவாக்குவதற்கு வழிவகுப்பதாக உள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன், நடிகர் விஜய், இப்போது கவிஞர் வைரமுத்து என்று அவரது வன்முறை பேச்சும், கொலை வெறி மிரட்டல்களும் அத்துமீறி தொடர்வது இதை திட்டமிட்டே அவர் செய்து வருகிறார் என்பதன் வெளிப்பாடே ஆகும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு தனிநபர்களுக்கு இடையே நடந்த மோதலை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதல் போன்று சித்தரிக்க அவர் முயற்சித்தார். இதேபோன்று பாஜகவைச் சார்ந்த கல்யாணராமனும் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். கவிஞர் வைரமுத்துவை அலைபேசியில் அழைத்து அருவருக்கத்தக்க முறையில் மிரட்டியுள்ளார்.

எனவே, அவர்களது இத்த கைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்களை கண்டிப்பதோடு, தமிழக அரசு உரிய முறையில் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading முன்பு பெருமாள் முருகன், நடிகர் விஜய் இப்போது வைரமுத்து! - எச்.ராஜவுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை