கர்ப்பிணி மனைவியை கொலை செய்த பஞ். தலைவருக்கு தூக்குத் தண்டனை

தேனி அருகே கர்ப்பிணி மனைவியைச் சித்திரவதை செய்து கொலை செய்த அதிமுக பேரூராட்சித் தலைவருக்குச் சாகும் வரை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது

by Balaji, Dec 15, 2020, 17:12 PM IST

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலணியைச் சேர்ந்தவர் சுரேஷ் ( 36).அதிமுகவைச் சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஹைவேவிஸ் பேரூராட்சியின் தலைவராக இருந்தார். இவருடைய மனைவி கற்பகவள்ளி (29). இவர்களுக்கு திவ்யா , சுந்தரி என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கற்பகவள்ளி 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது சுரேஷ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி தனது மனைவி யை தாக்கி சித்திரவதை செய்துள்ளார். வயிற்றுப் பகுதியில் பலமாகத் தாக்கியதில் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது . மேலும் தாலிக்கயிற்றால் கழுத்தை இறுக்கியதில் கற்பகவல்லி மயக்க நிலையை அடைந்தார்.

இதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடி சுரேஷ், அவரை சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். மறுநாள் அவர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததும் அவருடைய கரு சிதைந்ததும் தெரியவந்தது.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேரூராட்சி தலைவராக இருந்த சுரேசை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. நேற்று இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி அப்துல்காதர் விசாரணை நடத்திய குற்றவாளி சுரேஷை சாகும் வரை தூக்கில் இட வேண்டும் என்றும் கருச்சிதைவு செய்ததற்காக மேலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார்.

You'r reading கர்ப்பிணி மனைவியை கொலை செய்த பஞ். தலைவருக்கு தூக்குத் தண்டனை Originally posted on The Subeditor Tamil

More Theni News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை