மின்னியாபோலிஸ் நகரில் அதிகரிக்கும் கொள்ளைகள்..20 பேர் கைது.. அமெரிக்காவிலும் இப்படித்தான்

அமெரிக்காவில் மின்னியாபோலிஸ் நகரில் தனியாக செல்வோரை குரூரமாக தாக்கி, செல்போன், பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் நடந்த கொள்ளைகள் தொடர்பாக 22 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மின்னேசோட்டா மாகாணத்தில் பெரிய நகரம் மின்னியாபோலிஸ். இங்கு தனியாக செல்பவர்களை அடித்து உதைத்து செல்போன், பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வருவோர் விவரம் தெரியாமல் தனியாக செல்லும் போது இந்த இளம் கொள்ளையர்களிடம் சிக்கி விடுகிறார்கள்.

கொள்ளை சம்பவங்களை நேரில் பார்த்த ஸ்நேகா பாக்டா கூறுகையில், நான் தினமும் காலையில் தனியாகவே நடந்து செல்வேன். இப்போதெல்லாம் அப்படி செல்வதற்கு பயப்பட வேண்டியுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி காலையில் ஹென்னேபின் அவின்யூக்கும், 5வது தெருவுக்கும் இடையே உள்ள சந்திப்பில் ஒருவர் தனது செல்போனை பார்த்து கொண்டே நடந்தார். திடீரென நான்கைந்து இளைஞர்கள் அவரிடம் சென்று பேசினர். ஒரு சில வினாடிகளில் அவரை சூழ்ந்து கொண்டு, அடித்து உதைத்து தாக்கினர். அவர் சுருண்டு கீழே விழுந்த போதும் அவர் மீது ஏறி மிதித்து குரூரமாக தாக்கி விட்டு, அவரது செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கொண்டு ஓடினர்.

இதே போல், டார்கெட் பீல்டு பகுதியில் ஒருவரை தாக்கியதை பார்த்தேன். தாக்குதலில் கீழே விழுந்த அவர் மீது பைக்கை ஏற்றினர். இந்த காட்சிகள், சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருக்கின்றன. இப்போது போலீசார் அவர்களை பிடித்து வருகின்றனர் என்றார்.
மின்னியாபோலிஸ் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 48 வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதிலும் ஒரே வாரத்தில் 23 தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இப்போது போலீசார் 20 பேரை கைது செய்துள்ளனர். அனைவருமே 18 முதல் 27 வயது இளம் குற்றவாளிகள். கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் 156 வழிப்பறிக் கொள்ளைகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு அதே காலத்தில் 240 சம்பவங்களாக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக, மேட் டாட்ஸ் என்ற அமைப்பை நடத்தி வரும் வி.ஜே.சுமித் கூறுகையில், வீட்டில் சண்டை போட்டு கொண்டு வெளியேறும் இளைஞர்கள்தான் இப்படி குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்களிடம் விசாரித்து திருத்த வேண்டியுள்ளது. அவர்கள் ஏன் படிக்கச் செல்லவில்லை? மனரீதியாக ஏன் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை அறிந்து அதற்கேற்ப மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்றார்.