அமித்ஷா ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா..

டெல்லி கலவரத்திற்குப் பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்குப் போட்டியாக பாஜகவினர் சிஏஏ ஆதரவு போராட்டங்களை நடத்துகின்றனர்.

டெல்லியில் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலாம்பூர் போன்ற பகுதிகளில் கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 46 பேர் வரை உயிரிழந்தனர். பாஜக பிரமுகர்களின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள், சிஏஏ ஆதரவு போராட்டங்களால்தான் கலவரம் வெடித்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக, காலை 10.30 மணிக்குக் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே திரண்டனர். ராகுல்காந்தி தலைமையில் கூடிய எம்.பிக்கள், மத்திய அரசைக் கண்டித்து தர்ணா நடத்தினர். டெல்லி கலவரத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவே பொறுப்பு என்று கூறி, அவர் பதவி விலக வேண்டுமென்று கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் கட்சியின் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சசிதரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You'r reading அமித்ஷா ராஜினாமா செய்ய கோரி காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாடாளுமன்றத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் கண்ணை கட்டி தர்ணா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்