ஒ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உடனே மூட வேண்டும்.- எம் எச்ஜவாஹிருல்லா கோரிக்கை

Mar 3, 2018, 19:41 PM IST

சட்ட விரோதமாக செயல்படும் ஒ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உடனே மூட மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச்ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : தமிழ் நாட்டின் காவிரி படுகை மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சியின் சட்டவிரோத மற்றும் பாதுகாப்பற்ற செயல்பாடுகள் தொடர்பாக'காவிரி டெல்டா வாட்ச்' என்ற தன்னார்வ அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்ட பதில்கள் மற்றும் இணைய ஆவணங்கள் மூலம் காவிரி படுகை பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் ஒஎன்ஜிசி செயல்படுவதை இந்த ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் டெல்டா மாவட்டங்களில் இயங்கும் ஒ.என்.ஜி.சி -யின் ஹைட்ரோகார்பன் கிணறுகளில் ஒன்றுக்குக் கூட முறையான சுற்று சூழல் உரிமத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரியத்திலிருந்து ஒஎன்ஜிசி பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒ.என்.ஜி.சி. அறிவித்த 700 கிணறுகளில் 219 கிணறுகள் தொடர்பான தகவல்கள் மட்டுமே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உள்ளது. டெல்டா மாவட்ட எண்ணெய் கிணறுகள் அனைத்தும் உரிய உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாகச் செயல்பட்டுவருகிறது என்பது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தகவலாக உள்ளது.

உரிய உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் ஒ.என்.ஜி.சியின் சட்ட விரோத செயல்பாடுகளை தட்டிகேட்ட பல கிராம மக்கள் மீது வழக்கு போட்டும், உரிமம் இல்லாமல் இயங்கிய கதிராமங்கலம் கிணற்றின் எண்ணெய் கசிவை எதிர்த்துப் போராடிய அக்கிராம மக்களைக் காவல் துறை துன்புறுத்தி சிறையில் அடைத்தது நியாயமற்ற செயல் என்பதை இந்த ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

சுற்றுச் சூழலும் பொருளாதாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் பொருளாதாரத்திற்காக சுற்றுச் சூழலை நம்மால் பாதுகாக்க முடியவில்லை என்றால் மனிதஇனத்தை நம்மால் பாதுகாக்க இயலாது என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, இதுபோன்று சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் உரிமம் பெறாத ஒ.என்.ஜி.சி கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் இதுபோன்ற உரிமம் இல்லாத எண்ணெய் கிணறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எப்படி அனுமதித்தார்கள் என்பதைப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த எண்ணெய் கிணறுகளுக்கு எதிராகப் போராடிய அப்பாவி டெல்டா விவசாயிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் நன்னிலம், கடமங்குடி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் அமைக்கவிருக்கும் எண்ணெய் கிணறுகள் தொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும் காவிரி படுகை (டெல்டா) மாவட்டங்களை சிறப்பு வேளான் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading ஒ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உடனே மூட வேண்டும்.- எம் எச்ஜவாஹிருல்லா கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை