பெரும்பாலான கேள்விக்கு பதில் இல்லை - நிர்மலா தேவி வீட்டில் தேடி துருவிய சிபிசிஐடி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு சொந்தமான அருப்புக்கோட்டை வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

by Lenin, Apr 22, 2018, 15:41 PM IST

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவிக்கு சொந்தமான அருப்புக்கோட்டை வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகள் சிலரை, பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி நிர்மலா தேவி வற்புறுத்தும் ஆடியோ டேப் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் அலுவலகம் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் இதில் தொடர்பு இருக்கக் கூடும் என்ற வலுவான சந்தேகம் ஏற்படுவதாகவும், அவரை பின்னிருந்து இயக்கியவர்கள் அதிகார செல்வாக்கு உள்ளவர்களாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்த வழக்கின் பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெள்ளியன்று மதியம் 2 மணி முதல் காவலில் எடுத்துவிசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, துணைக் காவல் கண்காணிப்பாளர் சாஜிதா பேகம், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் பேராசிரியர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது. பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி பதில் கூறவில்லையெனவும், ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்துள்ளார் எனவும், அவற்றை வீடியோ மூலம் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை சிபிசிஐடி காவல்துறையில் ஒரு குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று சோதனை நடத்தினர். பதிவாளர், தேர்வாணையர் அலுவலகங்களில் இருந்து சிலமுக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நிர்மலாதேவி பல்கலைக்கழகம் வந்து சென்ற சி.சி.டி.வி. பதிவுகளை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நிர்மலா தேவியின் உடல் நிலையை நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவக்குழுவினர் நேரில் வந்து பரிசோதித்தனர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து அவரைச் சந்தித்தார்.

இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பேராசிரியர் நிர்மலா தேவியிடம் முழுமையான விசாரணை நடத்திய பின்பே, இவ்வழக்கின் முழு விவரம் மற்றும் அதில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் பற்றி தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading பெரும்பாலான கேள்விக்கு பதில் இல்லை - நிர்மலா தேவி வீட்டில் தேடி துருவிய சிபிசிஐடி Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை