நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கென பிரத்யெகத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் நாட்டின் முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் இருக்கும் பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது. பெண்களுக்காக பெண்களாலேயே செயல்படவிருக்கும் இந்த பிங்க் ஆட்டோ திட்டத்துக்கு பெங்களூரூவைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று அடித்தளமிட்டுள்ளது. பெங்களூரு நிர்வாக அமைப்பினராலும் ஒவ்வொரு ஆட்டோ நிறுத்துமிடங்களிலும் பிங்க் ஆட்டோக்களுக்கென 20 சதவிகித இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. நாட்டில் பெங்களூருவுக்கு முன்னதாக ஒடிசா, குஜராத், உத்தரப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களில் பிங்க ஆட்டோ சேவை செயல்பாட்டில்தான் உள்ளது. பெங்களூரூவில் செயல்படவிருக்கும் இந்த பிங்க் ஆட்டோக்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமிரா, ஜிபிஎஸ் கருவிகள் ஆகியவை பொருத்தப்பட உள்ளன. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்காக விரைவில் பெங்களூருவில் பிங்க் டாய்லெட் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் பெங்களூரு மாநகராட்சி ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.