தெளிவானவர்களுக்கு பங்குச்சந்தை ஓர் அட்சய பாத்திரம்தான்! நம்மால் முடியும்-4

by Rahini A, May 11, 2018, 17:05 PM IST

பங்குச்சந்தை முதலீட்டில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம் ஒன்று இருக்கிறது. அதாவது பங்குச்சந்தை ஏற்றம் நம்மை தூக்கியும்விடும். அதே நேரம் காலை வாரியும் விடும். பங்குச்சந்தையில் அல்லது மியூச்சவல் ஃபண்ட் முதலீடுகள் இந்த விளம்பரப்படங்களில் காட்டப்படுவது போல, நம்மை ஓவர் நைட்டில் ஒபாமாவாக எல்லாம் ஆக்கிவிடாது.

சரியான தீர்மானங்கள் இல்லையென்றால் ஓவர்நைட்டில் ஓட்டாண்டியாகக் கூட ஆகலாம். தீர்க்கமான கணிப்புகள் இல்லையென்றால் பங்குச்சந்தை என்பது சராசரி சம்சாரிக்கு நரகம்தான். ஆனால், ரிஸ்க் எடுப்பதெல்லாம் எங்களுக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என நினைத்தால், என்னால் சரியான கணிப்புகளால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும் என நினைத்தால் தொடர்ந்து படிக்கலாம்.

இவ்வளவு பில்டப் தேவையா? என்றால், ஆம். தேவை தான். நம்ம தேர்ந்தெடுத்த டாஸ்க் அந்த மாதிரி!

சரி... முதல் டாஸ்க்:

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்கு முன்னர், நீங்கள் யார்? உங்கள் நிலை என்ன? ஏன் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள்? போன்ற கேள்விகளுக்குப் பதில் தயாரித்துக்கொள்ளுங்கள். இந்த பதில்தான் நீங்கள் முதலீடுகளில் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதற்கான பதில்.

அடிப்படை:

நம்ம காய்கறிச்சந்தை மாதிரிதான். விற்பவனும் வாங்குபவனும் பங்குச்சந்தையிலும் இருப்பான். இந்தச் சந்தையின் முக்கியத் தலைமையிடங்கள், நியூயார்க், லண்டன், டொரண்டொ, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன.

இந்தப் பங்குச்சந்தையில் வியாபாரத்தைக் கையாளுபவருக்கு ‘ஸ்டாக் ப்ரோக்கர்’ எனப் பெயர். பெரும்பாலும் வங்கிகள்தான் இந்த ‘ஸ்டாக் ப்ரோக்கர்’ ஆக இருப்பர். முதலீடு செய்யும் உங்கள் சார்பாக வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்கள் சந்தையில் பங்குகளை வாங்கும். இதற்காக நீங்கள் ஒரு தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். மேலும், இதற்கான தகுந்த ஆலோசனைகளை வழங்க ‘சர்வீஸ் ப்ரோக்கர்ஸ்’ இருப்பார்கள். கூடுதலாக உங்களுக்கான தேவையை நீங்களே செய்துகொள்ள ‘டிஸ்கவுன்ட் ப்ரோக்கர்ஸ்’ உதவி செய்வார்கள்.

மியூச்சுவல் ஃபண்டு:

சந்தை முதலீடுகளில் உள்ள மற்றொரு தளம் தான் முதலீட்டு ஃபண்டுகள் அல்லது ‘மியூச்சுவல் ஃபண்டு’ என்றழைக்கப்படுகிறது. இந்த வகையான முதலீட்டில் அதிகமான முதலீடுலாளர்களின் முதலீடுகளை ஒன்று சேர்த்து பங்குகளை மொத்தமாக வாங்குவர். இந்தப் பங்குகளை மேற்பார்வையிடும் நிறுவனங்களுக்கு மேலாண்மை நிதியும் பங்குகளை விற்கும் விற்பனையாளர்களுக்கு பங்கு நிறுவனமும் கட்டணத்தொகையை செலுத்தவர்.

இதுமாதிரியான மியூச்சவ்ல் ஃபண்டு மூலம் முதலீடு செய்வதன் மூலம் முதலீடு பரவலாகும். இதனால், முதலீட்டாளர்களின் ரிஸ்க் மிகவும் குறைவு. ஆனால், இதில் செலுத்தப்படும் கட்டணத்தொகை சற்று கூடுதல் என்பது மட்டுமே இதில் உள்ள சின்ன மைனஸ்.

சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

பங்குச்சந்தை முதலீடு என்பது எப்போதும் ரிஸ்க் சார்ந்த விஷயம்தான். சில நேரங்களில் பெருநிறுவனங்களின் தோல்விகள் உங்கள் தலையில் விழலாம். அதானால், எதன் மீது முதலீடு செய்யப்போகிறோம் என்ற அறிவு அவசியம். அது சரியானதாக இல்லையென்றால் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு அதிகம். 

ஒரு நிறுவனத்தின் மீது முதலீடு செய்யும்போது அந்நிறுவனத்தின் பணவரவு, திறன், வருவாய், சந்தை மதிப்பு ஆகியவை முறையாக அமைந்துள்ளதா என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என தெளிவில்லாமல் செய்யப்படும் முதலீடு நஷ்டத்தையே தரும்.

உங்கள் போர்ட்ஃபோலியோ:

பங்குசந்தையைப் பொறுத்தவரையில் போர்ட்ஃபோலியோ என்பது மிகவும் முக்கியம். இதில், உங்கள் வருமானம், எவ்வளவு தூரம் உங்களால் ரிஸ்க் எடுக்க முடியும், உங்கள் வயது, உங்களது தேவை ஆகியவை குறித்த விபரங்கள் இடம்பெறும்.

உங்களது ‘ரிஸ்க்’ திறனைப் பொறுத்தும் உங்களது வருவாய் பொறுத்தும் பங்குகள் வர்த்தகம் அமையும். எவ்வளவுக்கு எவ்வளவு ரிஸ்க் அதிகமோ அந்தளவு வருமானமும் அதிகம் கிடைக்கும்.

நேரங்காலம் ரொம்ப முக்கியம்:

சந்தை நிலவரம், பங்குகளின் வளர்ச்சி, வீழ்ச்சி, முதலீடுகளின் காலம் எல்லாத்துக்கும் ஒரு நேரம் உள்ளது. நேரங்காலம் சரியாக அமையவும் வேண்டும். அதே சமயம், நேரங்காலம் பார்த்து செயல்படவும் செய்யணும்.

வட்டி தரும் முதலீடுகள், ரியல் எஸ்டேட், தங்கம் சார்ந்த முதலீடுகளைக் காட்டிலும் பங்கு சார்ந்த முதலீடுகள் இன்றைய காலகட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், குறைந்தகால முதலீடு செய்ய நினைப்பவர்கள் ரிஸ்க் குறைவான பங்குகளில் முதலீடு செய்வதே நல்லது.

குறிப்பாக, உங்களது ரிஸ்க் திறன் பொறுத்தே உங்களுக்கான முதலீடு திட்டங்கள் வரையறை செய்யப்படும். உங்களால் எவ்வளவு சேமிக்க முடியுமோ அதுவே உங்களது பங்குச்சந்தை முதலீடாக இருக்க வேண்டும். எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியுமோ அந்தளவே உங்களுக்கான முதலீடு அமைக்கப்பட வேண்டும். அப்போது, பொருளாதார வெற்றி உங்கள் கையில் நிலைத்து நிற்கும்.

தொடரும்...                                                                      -முனைவர் கோகுல் ஜெயபால்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்....

கோகுல் ஜெயபால் ஒரு கனடாவாழ் இந்தியர் ஆவார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் டொரன்டோ நகரில் வசித்து வருகிறார். உயிரியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள கோகுல், பயிற்சியாளர், எழுத்தாளர், மனித நேய ஆர்வலர், முதலீட்டாளர் எனப் பன்முகம் கொண்டவர். தனது விடாமுயற்சி மற்றும் சரியான திட்டமிட்ட முதலீடுகள் மூலம் பொருளாதாரச் சுதந்திரம் அடைந்துள்ளார். தான் விரும்பும் பங்கு வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தெளிவானவர்களுக்கு பங்குச்சந்தை ஓர் அட்சய பாத்திரம்தான்! நம்மால் முடியும்-4 Originally posted on The Subeditor Tamil

More Business News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை