நாம் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், கடந்து வந்த பாதையை மறக்கவே கூடாது என்று தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.
சென்னையில் அகில இந்திய தமிழ் சான்றோர் பேரவை சார்பில், தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமை தாங்கினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.ராஜா வரவேற்றார்.
தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தெட்சிணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ், சென்னை வாழ் நாடார் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் ஏ.வி.எஸ்.மாரிமுத்து, சிலம்புச்செல்வர், மா.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மா.பொ.சி.மாதவி பாஸ்கரன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக்கழக முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், சேலம் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏ.ரவீந்திரன், மராட்டிய மாநில தமிழ்சங்க பொதுச்செயலாளர் ஜெ.ராஜஇளங்கோ, புனே சவுத் இந்தியன் அசோசியேஷன் தலைவர் ஜெய்சங்கர், ஜெய்சிங் உள்பட பலர் கவர்னர் தமிழிசையை வாழ்த்தி பேசினர்.
பாராட்டுக்கு நன்றி தெரிவித்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
நான் தெலங்கானா கவர்னராக பொறுப்பேற்ற பின்பு அங்கு தினமும் தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காலடி எடுத்து வைக்கும்போது தெலங்கானா கவர்னர் வந்துள்ளார் என்று சொல்வதன் மூலம் தமிழகத்தில் தெலுங்கு ஒலிக்க தொடங்கி இருக்கிறது.
ஒரு பெண் அரசியலுக்கு வருவது என்பது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். நாம் உழைப்பதில் என்றும் சளைத்தவர்கள் அல்ல. அதனால்தான் பலர் நம்மை பார்த்து பயப்படுகிறார்கள். உழைத்தால் உயர்ந்த இடத்தை அடைய முடியும். தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள் என்பதும் நமக்கு தெரியும். தோல்விகள் என்னும் வலிகளை வலிமையாக மாற்றும் சக்தியும் நமக்கு உள்ளது.
நாம் எந்த உயரத்துக்கு சென்றாலும் கடந்து வந்த பாதையை மறக்கக் கூடாது. தொடர்ந்து நல்லதை செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் மூலம் பதவிகள் நம்மை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழிசை சவுந்தரராஜன், அவரது கணவர் சவுந்தரராஜன் ஆகியோருக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்டவர்களும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்னாடை, மலர்க்கொத்து, நினைவுப் பரிசுகளை வழங்கினர். முடிவில் தமிழ் சான்றோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் கரு.நாகராஜன் நன்றி கூறினார்.
ஏற்கனவே தெலங்கானா கவர்னர் தமிழிசைக்கு சென்னையில் வேறொரு அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது தேமுதிக, சமக உள்பட பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்தும் அவர்கள் புறக்கணித்தனர். இதனால், அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் என்று செய்திகள் வெளியாயின. இந்நிலையில், இந்த விழாவில் மாபா பாண்டியராஜன் பங்கேற்றிருக்கிறார்.










