கிணற்றுக்குள் விழுந்த நமிதா படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி

by Nishanth, Nov 3, 2020, 10:54 AM IST

திருவனந்தபுரத்தில் நடந்த 'பவ் பவ்' சினிமா படப்பிடிப்பின் போது நடிகை நமீதா 35 அடி கிணற்றில் தவறி விழுந்தார். அதைப் பார்த்துப் படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். டைரக்டரின் கட் என்ற சத்தத்தைக் கேட்ட பின்னர் தான் அது படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட காட்சி என அங்கிருந்தவர்களுக்குத் தெரியவந்தது.நடிகை நமிதா சொந்தமாக ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு 'பவ் பவ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாகத் திருவனந்தபுரம் அருகே உள்ள சித்ராஞ்சலி ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. கதைப்படி கிணற்றுக்குள் விழும் ஒருவரை ஒரு நாய் மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றி வெளியே கொண்டு வருகிறது. எப்படி அந்த நாய் அந்த நபரைக் காப்பாற்றுகிறது என்பது குறித்து இந்தப் படத்தில் மிகவும் பரபரப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

கதைப்படி நமிதா தான் கிணற்றுக்குள் தவறி விழுவார். நேற்று இந்த காட்சியை எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. படப்பிடிப்பைப் பார்ப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டிருந்தனர். ஆனால் என்ன காட்சி எடுக்கப்படுகிறது என்பது குறித்துப் படப்பிடிப்பைப் பார்க்க வந்தவர்களுக்குத் தெரியாது. படப்பிடிப்புக்காக அங்கு மிகத் தத்ரூபமாக கிணற்றுக்கான செட் போடப்பட்டிருந்தது. கிணற்றின் அருகே நமிதா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். நமிதாவை அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது கேமராக்களும் தயார் நிலையில் இருந்தன. இந்த விவரம் அங்கிருந்தவர்கள் யாருக்கும் அதிகமாகத் தெரியாது. செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அவரது போன் கை தவறி கிணற்றுக்குள் விழுந்தது. அதைப் பிடிக்க முயற்சித்த போது நமிதா தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

இதைப் பார்த்த அங்கிருந்த படப்பிடிப்பைப் பார்க்க வந்தவர்கள் அதை உண்மை எனக் கருதி கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக அனைவரும் ஓடினர். அப்போது டைரக்டர் கட் என்று சொல்லும் சத்தம் கேட்டது. அதன் பிறகு தான் அது படப்பிடிப்பு எனத் தெரியவந்தது. பின்னர் தான் அங்கிருந்த அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.நடிகை நமிதா சொந்தமாக முதன்முதலாக தயாரிக்கும் இந்தப் படத்தை அவருடன் சுபாஷ் எஸ். நாத் என்பவரும் சேர்ந்து தயாரிக்கிறார்.

இரட்டையர்களான ஆர்.எல். ரவி மற்றும் மேத்யூ ஸ்கரியா ஆகியோர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். ஒளிப்பதிவு பிஎஸ் கிருஷ்ணா, முருகன் மந்திரம் எழுதும் பாடல்களுக்கு ரெஜி மோன் என்பவர் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் மேலும் பல மொழிகளில் இந்த படம் டப்பிங் செய்யப்படுகிறது.

You'r reading கிணற்றுக்குள் விழுந்த நமிதா படப்பிடிப்பை பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சி Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை