ஹீரோக்கள் கையில் தமிழ் சினிமா சிக்கிவிட்டது.. பாப்பிலோன் பட விழாவில் தயாரிப்பாளர் குமுறல்..

by Chandru, Jan 12, 2021, 10:17 AM IST

ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்துப் படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம். அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன் மூலம் தங்கையை பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.

இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பது தான் படத்தின் கதை.கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் அறிமுகமாகிறார். தங்கையாகச் சௌமியா, அம்மாவாக ரேகா சுரேஷ் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இசை. அருள்செல்வன் ஒளிப்பதிவு செ. சுதர்சன் எடிட்டிங் செய்துள்ளார்.

இந்தப் படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்தை வரைந்தவர் இவர்தான்.பாப்பிலோன் படத்தின் ஆடியோ, டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.டபுள்ஸ் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த கே.ராஜன் பேசும்போது கூறியது: பாப்பிலோன் படத்தின் டீஸர் அருமையாக இருந்தது. இதில் பெண்கள் சில இளைஞர்களால் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து சமூக உணர்வுடன் இப்படத்தை உருவாக்கி உள்ளனர். ஆறு ராஜா படத்தைத் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோவுக்கான தகுதி அவரிடம் இருக்கிறது.

தமிழ் சினிமா இப்போது தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஏன் ரசிகர்கள் கையிலிருந்து கூட போய்விட்டது. ஒரு சில ஹீரோக்கள் கையில் தான் திரையுலகம் சிக்கி இருக்கிறது. ஹீரோ கால்ஷீட் கொடுத்து அவர் சொல்லும் இயக்குனரை வைத்துத்தான் படம் தயாரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதில் ஹீரோவுக்குதான் பில்டப் இருக்கும். வேறு ஒரு மெசேஜும் இருக்காது. விஜய் நடித்த மெர்சல் என்ற படம் தயாரித்த தயாரிப்பாளர் நஷ்டத்துக்குள்ளானார். அதற்கு இயக்குனர்தான் காரணம். விஜய் நடிக்கும் பட்சம் என்றால் குறைந்த பட்சம், 15 கோடி லாபம் வரவேண்டும்.

ஆனால் நஷ்டம் ஏற்பட்டது எப்படி?தெலுங்கு, கன்னடம். மலையாள திரையுலகில் தயாரிப்பாளர்கள் உறுதியாக ஒற்றுமையாக உள்ளனர். அங்கு ஹீரோக்கள் ஆதிக்கம் கிடையாது. படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்ப சம்பளம் தருகிறார்கள். தமிழில்தான் பட பட்ஜெட்டில் 50 சதவீதம் ஹீரோவுக்கு சம்பளம் தரவேண்டி உள்ளது. ஒரு நடிகர் புதுமுகமாகி இரண்டு படம் ஹீட் கொடுக்கும் வரையில் தயாரிப்பாளர்களிடம் அனுசரணையாக இருப்பார். 3வது படம் ஹிட் ஆகிவிட்டால் அதன்பிறகு அவர் வைத்ததுதான் சட்டம். தயாரிப்பாளர்களும் அவரிடம் போய் சரணடைந்துவிடுவார்கள் இந்தநிலை எப்போது மாறுகிறதோ அப்போதுதான் தமிழ் சினிமா உருப்படும்.இவ்வாறு கே.ராஜன் கூறினார்.

நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் பாப்பிலோன் ஆடியோவை வெளியிட்டார். பிறகு அவர் பேசும் போது,நான் சினிமா விழாக்களுக்கு அதிகம் வருவதில்லை. இந்த விழாவுக்கு வந்ததற்குக் காரணம். இப்படம் பொள்ளாச்சியில் அப்பாவி பெண்கள் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த சம்பவத்தை நக்கீரன் தான் எதிர்ப்புகள் வந்தபோதும் வெளிக்கொண்டு வந்தது. தற்போது சிபிஐ விசாரிக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் சமுதாயத்துக்கு நல்லதொரு மெசேஜை சொல்லும் படம் பாப்பிலோன்.

இயக்குனர், ஹீரோ ஆறு ராஜா சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற சந்திரமுகி ஓவியத்தை வரைந்தவர், தோட்டா தரணியுடன் உதவியாளராக இருந்தவர். முதல் படத்தையே இப்படியோரு மெசேஜ் சொல்லும் படமாக உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள் என்றார். ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், தயாரிப்பாளர் மதியழகன், நடிகை ஸ்வேதா ஜோயல், மதுமிதா, கோமல் சர்மா, ஸ்மிருதி மற்றும் படக் குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியைப் பத்திரிகை தொடர்பாளர் ஏ. ஜான் தொகுத்து வழங்கினார்.

You'r reading ஹீரோக்கள் கையில் தமிழ் சினிமா சிக்கிவிட்டது.. பாப்பிலோன் பட விழாவில் தயாரிப்பாளர் குமுறல்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை