39 லட்சம் பணம் வாங்கி மோசடி பிரபல கவர்ச்சி நடிகை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்

by Nishanth, Feb 10, 2021, 09:15 AM IST

காதலர் தினம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவதாக கூறி 39 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், அவரது கணவர் உள்பட 3 பேர் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ஷியாஸ். இவர் நிறுவனங்களுக்கான திறப்பு விழா மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன், அவரது கணவர் உள்பட 3 பேருக்கு எதிராக கேரள டிஜிபியிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், கடந்த 2016 முதல் 2019 வரை கேரளாவில் காதலர் தினம், சில நிறுவனங்களில் திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருவதாக கூறி சன்னி லியோன் தன்னிடமிருந்து பல தவணைகளாக 39 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எனவே சன்னி லியோன் உட்பட மூன்று பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து விசாரிக்க கொச்சி குற்றப்பிரிவு போலீசுக்கு கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டார். இதையடுத்து சன்னி லியோன் அவரது கணவர் உள்பட 3 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சன்னி லியோன் தன்னுடைய குடும்பத்தினருடன் கேரளாவுக்கு வந்திருந்தார். அப்போது கொச்சியில் வைத்து இந்த பண மோசடி தொடர்பாக அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பணம் வாங்கியது உண்மை தான் என்றும், நிச்சயித்த படி நிகழ்ச்சிகளை நடத்தாமல் இருந்ததால் தான் தன்னால் வர முடியவில்லை என்றும், நிகழ்ச்சிகளை நடத்தினால் அதில் கலந்து கொள்ள தயார் என்றும் அவர் கூறினார்.

இதன் பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர். பண மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் கொச்சி போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்ற அச்சம் நடிகை சன்னி லியோனுக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகை சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் ஹெப்பர் மற்றும் சுனில் ரஜனி ஆகியோருக்காக இந்த முன் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒப்பந்தம் செய்தபடி தனக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பணம் தராமல் மோசடி செய்ய முயற்சித்தனர் என்றும், தன்னை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க முயற்சித்தனர் என்றும் முன் ஜாமீன் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading 39 லட்சம் பணம் வாங்கி மோசடி பிரபல கவர்ச்சி நடிகை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை