நடிகர் தற்கொலையில் மனைவி- மாமியார் மீது போலீஸ் வழக்கு

by Chandru, Feb 18, 2021, 10:17 AM IST

இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். மன உளைச்சல் காரணமாகக் கடந்த 2020 ஆண்டு இவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இது பிறகு போதை மருத்து வழக்காகவும் மாறியது. சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தற்போது ரியா நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

இந்நிலையில் தோனி வாழ்க்கை படத்தில் சுஷாந்த்துடன் நடித்த சந்தீப் நஹர் மும்பை உள்ள தனது வீட்டில் மின் விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். இவர் அக்‌ஷய் குமாரின் 'கேசரி' படத்திலும் நடித்துள்ளார்.தூக்கு போட்டுக்கொள்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்னதாக அவர் வீடியோவில் தனது மனைவி மற்றும் மாமியார் மீது குற்றம் சாட்டி அதனை ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். மேலும் பாலிவுட்டில் அவர் எதிர்கொண்ட பாகுபாடு பற்றியும் சந்தீப் நஹர் ஒரு கடித தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நஹரின் படுக்கையறையின் கதவு உட்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. கதவை மனைவி தொடர்ந்து தட்டிப் பார்த்தும் எந்த பதிலும் வராததால், அவர் தனது நண்பர்களையும், பிளாட்டின் உரிமையாளரையும், ஒரு முக்கிய தயாரிப்பாளரையும் அழைத்தார். கடைசியாக ஒரு டூப்ளிகேட் சாவியுடன் கதவு திறக்கப்பட்டது . நஹர் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்ததால் அவரை மீட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
நஹரின் சகோதரரும் தந்தையும் மும்பை காவல் நிலையத்துக்கு சென்று இறுதிச் சடங்கு செய்ய உடலைக் கோரி பெற்றனர். தற்போது நஹர் குடும்பத்தினரிடமிருந்து பெற்ற புகாரின் பேரில் நஹர் மனைவி காஞ்சன் மற்றும் மாமியார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

நஹர் வெளியிட்ட ஃபேஸ்புக் தகவலில் என் மரணம் குறித்து என் மனைவி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக தற்கொலை செய்வதற்கு முன் நஹர் ஃபேஸ்புக்கில் இந்தியில் வெளியிட்டுள்ள வீடியோவில், தன் மனைவி தன்னுடன் தொடர்ந்து சண்டையிடுவதால் விரக்தியடைந்ததாகவும் அவரால் துன்புறுத்தப்பட்டு பிளாக் மெயில் செய்யப் படுவதாகவும், அவரது மாமியாரும் தன்னை அவமானப்படுத்தியதாகவும் கூறி உள்ளார்.மேலும் நான் நீண்ட காலத்திற்கு முன்பு தற்கொலை செய்துகொண்டிருப்பேன், ஆனால் இந்த பிரச்சனைகள் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இப்பிரச்சனை முடியாது என்பதால் நான் இப்படியொரு முடிவு எடுக்கிறேன். நான் நரக வாழ்க்கை தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.

நான் வைக்கும் ஒரே வேண்டு கோள் என்னவென்றால், நான் இறந்த பிறகு, தயவுசெய்து காஞ்சனை (நிஹர் மனைவி)எதுவும் செய்யாதீர்கள் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவும் என தெரிவித்திருந்தார். நஹரின் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கி லிருந்து போலீஸார் நீக்கி விட்டனர்.சுஷாந்த் சிங் தற்கொலையைப் போல் நடிகர் சந்தீப் நஹர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading நடிகர் தற்கொலையில் மனைவி- மாமியார் மீது போலீஸ் வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை