`நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைக்கவில்லை – அந்நியன் ரீமேக் ஷங்கருக்கு நோட்டீஸ்!

by Madhavan, Apr 15, 2021, 14:38 PM IST

இந்தி ரீமேக் அனுமதி விவகாரத்தில், இயக்குனர் ஷங்கருக்கு 'அந்நியன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் 'ஆஸ்கார்' ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

2004-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம், 'அந்நியன்'. சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிய இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றளவும் மனதில் நிற்பவை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார் ஷங்கர். "பாலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் ஷங்கர் பண்ணப்போறாராமே" என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாயின.

அண்மையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 'முதல்வன்' படத்தை அனில் கபூரை வைத்து பாலிவுட்டில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் ஷங்கர். அந்தப் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, 20 ஆண்டுகள் கழித்து, தற்போது, 'அந்நியன்' ரீமேக்கிற்காக பாலிவுட்டிற்கு சென்றிருக்கிறார். இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். பென் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2022-ல் தொடங்கவிருக்கிறது.

இது தொடர்பாக ஷங்கர், ``ரன்வீர் சிங் நடிப்பில் 'அந்நியன்' திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தை 'பென் ஸ்டூடியோ' என்ற தயாரிக்கவிருப்பதாகவும் புதன்கிழமை அறிவித்திருந்தார்.. இந்நிலையில் இந்த படத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்நியன் படத்தைத் தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயந்திலால் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக ஷங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் '' அந்நியன் படத்தின் கதையைத் தழுவி இந்தியில் ஒரு படத்தை நீங்கள் இயக்கவிருக்கும் தகவல் அறிந்து அதிர்ச்சிக்குள்ளானேன்.

அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து இந்தக் கதைக்கான உரிமையை நான் முழுத் தொகையையும் கொடுத்துப் பெற்றுள்ளேன். அதற்கான ஆவணங்களும் இருக்கின்றன. இந்தக் கதையின் முழு முதல் உரிமையாளர் நான் மட்டுமே. எனவே இப்படத்தின் கதையை என்னுடைய அனுமதியின்றி தழுவுவதோ, ரீமேக் செய்வதோ முற்றிலும் சட்டவிரோதமானது.

என்னிடம் தகவல் கூட தெரிவிக்காமல் என்னுடைய வெற்றிப் படமான அந்நியனின் இந்தி ரீமேக்கை இயக்குவதன் மூலம் அப்படத்தின் புகழை நீங்கள் அறுவடை செய்ய முயல்கிறீர்கள். என்னிடம் காப்புரிமை உள்ள ஒரு கதையைச் சட்டவிரோதமாக நகலெடுப்பதால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எதையும் தொடராமல் உடனடியாக நிறுத்திக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்தக் கடிதத்துடன் நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

You'r reading `நீங்கள் இப்படி செய்வீர்கள் என நினைக்கவில்லை – அந்நியன் ரீமேக் ஷங்கருக்கு நோட்டீஸ்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை