ஐபிஎல் ஏலம் ஒரு அலசல் ராஜஸ்தான்-டாப் டக்கர், சென்னை-பாஸ் டெல்லி ரொம்ப மோசம்

by Nishanth, Feb 19, 2021, 16:01 PM IST

ஐபிஎல் 14வது சீசனுக்கான மினி ஏலம் சென்னையில் முதன் முதலாக நேற்று நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல புதிய கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இந்த முறை தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் சீசன் வரலாற்றிலேயே மிக அதிக தொகையான ₹ 16.25 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவர் யுவராஜ் சிங்கின் ₹ 16 கோடி என்ற சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக கைல் ஜாமிசன், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர். நேற்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் எப்படி செயல்பட்டன, வீரர்களை தேர்வு செய்ததில் அவர்கள் எடுத்த முடிவுகள் சரியானதா என்பதை பார்க்கலாம்..



சென்னை சூப்பர் கிங்ஸ்

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை வாங்குவதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மிகக் கடுமையாக போட்டி போட்டது. வழக்கமாக கேதார் ஜாதவ், பியூஷ் சாவ்லா, உனத்கட் போன்ற இந்திய வீரர்களுக்குத் தான் சென்னை அணி கோடிகளை கொட்டி அவர்களை வாங்குவதற்கு மல்லுக் கட்டுவார்கள். இதுவரை வெளிநாட்டு வீரர்களுக்காக இதுபோல சென்னை அணி போட்டி போட்டதே கிடையாது. தங்களது அணியில் மிடில் ஆர்டரில் நல்ல ஹிட்டரும், ஆஃப் ஸ்பின்னரும் இல்லாததால் அந்த இரண்டு இடத்திற்கும் மேக்ஸ்வெல் தான் சரியான ஆளாக இருப்பார் என சென்னை கருதியதால் தான் அவரை வாங்குவதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்தது. ஆனால் அவர்களது பட்ஜெட் லேசாக இடித்ததால் மேக்ஸ்வெல்லை வாங்க முடியாமல் போய்விட்டது. ஒருவேளை கரண் ஷர்மாவையும் விடுவித்து மீண்டும் எடுத்திருந்தால் கூடுதல் தொகை கிடைத்திருக்கலாம். மேக்ஸ்வெல் கைநழுவி போய் விட்டதால் சென்னையின் இரண்டாவது சாய்ஸாக இருந்த இங்கிலாந்து வீரர் மோயின் அலிக்கு வலைவீசி சென்னை அவரை வாங்கியது. ஏலம் தொடங்குவதற்கு முன்பே மோயின் அலி சென்னை அணிக்கு சரியான சாய்ஸ் ஆக இருப்பார் என்று காம்பீர் கூறியிருந்தார்.

என்பது குறிப்பிடத்தக்கது. மேக்ஸ்வெல் எந்தெந்த இடங்களை நிரப்புவாரோ அதே இடங்களை மோயின் அலியும் நிரப்புவார். மேலும் மேக்ஸ்வெல்லை எல்லா போட்டியிலும் இறக்கலாம். ஆனால் மோயின் அலியை சென்னை அப்படி எல்லா போட்டியிலும் ஆட வைப்பதற்கு வாய்ப்பில்லை. இதனால் சென்னைக்கு ஒரு இந்திய ஆல் ரவுண்டர் தேவை. அதனால் தான் கவுதமை சென்னை அணி எடுத்தது. நேற்று நடந்த ஏலத்தில் ஆஃப் ஸ்பின்னர்கள் அதிகமாக இல்லை என்பதால் தான் கவுதம் மிக அதிக தொகையான ₹ 9.25 கோடிக்கு ஏலம் போனார். கடந்த முறை சென்னை அணி உள்ளூர் வீரர்களை அதிகமாக வாங்கவில்லை. இந்த முறையாவது உள்ளூர் வீரர்களுக்கு அதிகமாக சென்னை வலைவீசும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போலவே உள்ளூர் வீரர்களின் பெயர் வரும்போது சென்னை அதை கண்டுகொள்ளவே இல்லை. செய்யது முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய தமிழக வீரரான ஷாருக்கானின் பெயர் அறிவிக்கப்பட்ட போது அனைவரது பார்வையும் சென்னையின் பக்கம் திரும்பியது. ஆனால் சென்னை அணியிடம் இருந்து நோ ரெஸ்பான்ஸ். இதனால் ஷாருக்கானை பஞ்சாப் அணி வாங்கியது. கடைசியில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதற்காக ஹரி நிஷாந்தை மட்டும் சென்னை வாங்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்த அணி வழக்கம் போல வீரர்களை வாங்குவதற்கு கோடிகளை கொட்டியுள்ளனர். மேக்ஸ்வெல்லை ₹ 14.25 கோடிக்கும், கைல் ஜாமிசனை ₹ 15 கோடிக்கும் வாங்கியுள்ளனர். டிவில்லியர்ஸ் மற்றும் கோஹ்லி ஆகிய இருவரை மட்டுமே மிடில் ஆர்டரில் இதுவரை ராஜஸ்தான் அணி நம்பியிருந்தது. தற்போது மேக்ஸ்வெல்லும் இணைந்திருப்பதால் பெங்களூரு அணிக்கு மிடில் ஆர்டர் மிகப் பலமாக அமைந்துள்ளது. பல கோடிக்கு மேக்ஸ்வெல் விலை போனாலும் இதுவரை எந்த ஐபிஎல் சீசனிலும் இவர் சிறப்பாக ஆடவில்லை என்றே கூற வேண்டும். அந்த கெட்டப் பெயரை இந்த சீசனில் இவர் மாற்ற முயற்சிப்பார் என நம்புவோம். ஜாமிசனுக்கு ஏன் அவ்வளவு விலை என்று பலருக்கும் ஆச்சரியம் ஏற்படாமல் இல்லை. இது போலத் தான் தைமல் மில்ஸ் என்பவரை முன்பு எடுத்தார்கள். அவரால் அணிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அதே நிலை இவருக்கும் வரக்கூடாது. மேலும் இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கான இடம் இப்போதும் காலியாகவே இருக்கிறது. ஷிவம் துபேவுக்கு பதிலாக போதுமான வீரரை இவர்கள் வாங்கவில்லை என்பது ஒரு குறை தான்.

மும்பை இந்தியன்ஸ்

மலிங்கா இல்லாததால் அவரது இடத்திற்கு ஜாமிசன் அல்லது ஜை ரிச்சர்ட்சன் போன்ற வீரர்களில் யாராவது ஒருவரை வாங்க வேண்டும் என்று இந்த அணியின் ரசிகர்கள் பெரிதும் விரும்பினர். ஆனால் ஆடம் மில்னே மற்றும் கூல்டர்நைல் என தங்களது பழைய வீரர்களையே மும்பை மீண்டும் வாங்கியுள்ளது. அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே இவர்கள் என்ன செய்தாலும் சரியாகத் தான் இருக்கும் என நம்பலாம். ராகுல் சாஹர் மீது இருக்கும் நெருக்கடியை குறைப்பதற்காக அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை வாங்கியது ஒரு நல்ல முடிவு என கருதலாம். மேலும் தென் ஆப்பிரிக்க அணியின் இளம் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சனை வாங்கி இருப்பதும் இந்த அணிக்கு பலம் சேர்க்கும். மொத்தமாக பார்த்தால் மும்பை அணிக்கு தேவையான அனைத்து வீரர்களும் உள்ளனர். வீரர்களை வாங்குவதில் இந்த அணி பெரிதாக எதுவும் தவறு செய்தது போல தோன்றவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த முறை நடந்த ஐபிஎல் ஏலத்தில் டாப் டக்கராக செயல்பட்ட அணி எது என்று கேட்டால் அனைவரது பார்வையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நோக்கித் தான் இருக்கும். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை மிக தைரியமாக கழட்டி விட்டுள்ளனர். ஐபிஎல் சீசனில் மிக அதிக விலைக்கு கிறிஸ் மோரிசை வாங்கி இந்த அணி சாதனை படைத்துள்ளது. பந்துவீச்சில் இவர் ஆர்ச்சருக்கு ஈடு கொடுப்பார் என அனைவரும் நம்புகின்றனர். மேலும் முஸ்தாபிசுரை ₹ 1 கோடிக்கு வாங்கியதின் மூலம் அணி மேலும் பலமடைந்துள்ளது. பேட்டிங்கில் மிடில் ஆர்டரை பலப்படுத்துவதற்காக ஷிவம் துபேவை வாங்கியது ஒரு நல்ல முடிவு என கருதப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் துபே ஆகியோர் பந்து வீச்சுக்கும் மிகவும் கைகொடுப்பார்கள். அதேபோல திவேதியா, மோரிஸ் ஆகியோர் பேட்டிங்கிலும் பலம் சேர்ப்பார்கள். இதனால் பேட்டிங் ஆப்ஷனுக்கு 9 பேர், பவுலிங் ஆப்ஷனுக்கு 7 பேர் என இந்த அணி மிக பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

என்னவோ தெரியவில்லை, இவர்கள் மூன்றே மூன்று வீரர்களை மட்டும் தான் இம்முறை வாங்கி இருக்கிறார்கள். ஆனாலும் அணியை சற்று அடுத்த லெவலுக்கு உயர்த்தியுள்ளனர் என கூறலாம். முஜிபுர் ரஹ்மானையும் வாங்கியதன் மூலம் இந்த அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு மூன்று குழல் சுழல் கூட்டணி உருவாகியுள்ளது. இந்த அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சற்று பலவீனமாக இருந்தது. தற்போது கேதார் ஜாதவ் வந்ததின் மூலம் அந்த குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஜெகதீஷ் சுசித்தும் ஒரு நல்ல தேர்வாக உள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ்

இந்த முறை நடந்த ஏலத்தில் சற்று குழப்பவாதிகள் அணி எது என்று கேட்டால் தயங்காமல் சொல்லி விடலாம் அது டெல்லி கேப்பிடல்ஸ் தான் என்று.... ஏன் அப்படி என்று நீங்கள் கேட்பது புரிகிறது.... டெல்லி அணியில் ஏராளமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருந்தும் தேவையில்லாமல் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கி உள்ளார்கள். இந்த அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருப்பதாலோ என்னவோ ஆஸ்திரேலிய வீரர்களாக பார்த்து வாங்கிப் போட முடிவு செய்து விட்டார்கள் என தோன்றுகிறது. இது குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் சாம் பில்லிங்சை வாங்கியது ஒரு நல்ல முடிவாக கருதப்படுகிறது. இது தவிர ₹ 1 கோடிக்கு உமேஷ் யாதவை வாங்கியுள்ளனர். பியூஷ் சாவ்லாவை வாங்குவதற்கு இவர்கள் போட்டி போட்டார்கள். ஆனால் பாதியிலேயே அந்த முயற்சியை கைவிட்டு விட்டனர். சற்று முயற்சி செய்து அவரையும் வாங்கி இருந்தால் இந்த அணியின் வலிமை அதிகமாயிருக்கும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஏலத்தின் போது பெரும்பாலான சமயங்களில் இவர்கள் அமைதியாகவே இருந்தனர். ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது ஓரளவு நல்ல வீரர்களைத் தான் இவர்கள் வாங்கியுள்ளனர். ரசல், சுனில் நரேன் ஆகியோர் முந்தைய சீசனில் சுமாராகத் தான் விளையாடினார்கள். ஆனாலும் இவர்களை குறித்து அதிகமாக கவலைப்பட தேவையில்லை. எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இவர்கள் விஸ்வரூபம் எடுப்பார்கள். மேலும் இருவரும் சிறப்பாக விளையாடா விட்டாலும் அவர்களது இடத்திற்கு வேறு சில வீரர்களும் இருக்கின்றனர். ஷாகிப் அல் ஹசனை மீண்டும் வாங்கியுள்ளனர். அவருடன் சேர்த்து பென் கட்டிங்கையும் வங்கியிருப்பது சிறப்பு. ஹர்பஜன் சிங்கை வாங்கியிருப்பது வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவின் பணிச் சுமையை குறைக்கும்.

பஞ்சாப் கிங்ஸ்

₹ 14 கோடிக்கு ஜை ரிச்சர்ட்சனையும், ₹ 8 கோடிக்கு கைல் மெரிடித்தையும் வாங்கி பந்து வீச்சுக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளார்கள். தமிழக வீரர் ஷாருக்கானை ₹ 5.25 கோடிக்கு வாங்கியிருப்பது நல்ல முடிவாக கருதப்படுகிறது. பஞ்சாப் அணிக்கு நீண்ட காலமாக மிடில் ஆர்டர் பிரச்சினை இருந்து வருகின்றது. இதற்கு ஷாருக்கான் ஒரு நல்ல தீர்வாக இருப்பார் என நம்பலாம். இது மட்டுமில்லாமல் டேவிட் மலனை 1.5 கோடிக்கு வாங்கி உள்ளார்கள். கெய்லின் இடத்திற்கு இவர் ஒரு சிறந்த மாற்று வீரராக இருப்பார். கடந்த சீசன் வரை இந்த அணியின் பெயர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் என இருந்தது. ராசியோ என்னவோ தெரியவில்லை, இந்த முறை தங்களது அணியின் பெயரை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியுள்ளார். இதுவரை காகிதப் புலிகளாகவே இருந்த இவர்கள், பெயரை மாற்றினாலாவது இந்த முறை கோப்பையை கைப்பற்றுவார்களா என பார்ப்போம்.

You'r reading ஐபிஎல் ஏலம் ஒரு அலசல் ராஜஸ்தான்-டாப் டக்கர், சென்னை-பாஸ் டெல்லி ரொம்ப மோசம் Originally posted on The Subeditor Tamil

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை