கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள்

Health Tips: Five ways to keep your kidneys healthy

by SAM ASIR, Jun 24, 2019, 11:35 AM IST

அலுவலகத்தில் உங்கள் பக்கத்தில் இருப்பவர் திடீரென பெர்மிஷன் போட்டு கிளம்புவார். "எங்கே கிளம்பிட்டீங்க...?" என்று கேட்டால், "இன்னைக்கு டயாலிசிஸ் பண்ணனும்," என்பார். அப்படித்தானே!

அந்த அளவுக்கு கிட்னி என்னும் சிறுநீரக பிரச்னை அதிகமாகி விட்டிருக்கிறது. ஏதோ வேண்டுதல்போல, மக்கள் மருத்துவமனைகளுக்குச் சென்று டயாலிசிஸ் என்னும் செயற்கை சிறுநீரக செயல்பாடுக்காக படுத்துக் கிடக்கின்றனர்.

சிறுநீரகத்தின் செயல்பாடு

சிறுநீரகம் நம் உடலிலுள்ள மிக முக்கியமான உறுப்புகளுள் ஒன்று. விலாவின் கீழாக முதுகுதண்டின் இருபுறமும் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருள்களை நீக்குவதோடு உடலில் திரவங்களின் அளவையும் இது ஒழுங்குபடுத்துகிறது.

ஒருநாளைக்கு நம் உடலுள்ள 800 மில்லி லிட்டர் கழிவுப்பொருளையும் அதிகப்படியான நீரையும் வெளியேற்றுவதன் மூலம் 180 மில்லிலிட்டர் அளவுள்ள இரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிக்கின்றன. உடலில் எலக்ட்ரோலைட் என்னும் தாதுகளின் அளவை சரியாக காத்துக்கொள்வதோடு, இரத்த சிவப்பணுக்களை உருவாக்கும் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. ஆகவே, சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.

சிறுநீரகம் பழுதுபடல்

உயர்இரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய குறைபாடு உள்ளவர்களுக்கும், பரம்பரையில் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கும் சிறுநீரக செயல்பாட்டில் கோளாறு வருவதற்கு வாய்ப்புள்ளது. இதுபோன்று எந்த தொடர்பும் இல்லையென்று கூறுபவர்களும்கூட சிறுநீரகங்களை ஆரோக்கியமாக காத்துக்கொள்ளும் வழிகளை கையாளுவது நல்லது.

நீர் அருந்துங்கள்

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள், ஏராளமாக நீர் அருந்தவேண்டும். உதாரணமாக, 70 கிலோகிராம் எடையுள்ள நபர் ஒருநாளுக்கு குறைந்தது 2.5 லிட்டர் நீர் அருந்தவேண்டும். அப்போதுதான் உடலில் நீர்ச்சத்து குறைவுபடாது.

சிறுநீர், வைக்கோல் நிறத்தில் வெளியேறினால் போதுமான நீர்ச்சத்து உடலில் இருக்கிறது என்று அர்த்தம். அதைவிட அடர்ந்த நிறமாக வெளியேறினால் அதிகமாக நீர் அருந்தவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். சில மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு சிறுநீர் நிறமற்றதாகவும் இருக்கும். சிறுநீர் பிரிவதற்கான மருந்துகள் மற்றும் உணவு பொருள்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறுவதால் உடலில் நீர்ச்சத்து மற்றும் சோடியம் என்ற தாது ஆகியவை குறைய நேரிடலாம்.

மருத்துவ கண்காணிப்பு

நம் நாட்டில் தீவிர சிறுநீரக செயல்பாட்டு கோளாறால் அவதிப்படுவோரில் 40 முதல் 60 விழுக்காட்டினருக்கு சிறுநீரகம் பழுதுபடுவதற்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய் மற்றும் உயர்இரத்த அழுத்தமே காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆகவே, சர்க்கரைநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்போர் முறையான பரிசோதனை செய்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது அவசியம்.

A1C என்னும் பரிசோதனையை ஆண்டுக்கு குறைந்தது இருமுறையேனும் செய்யவேண்டும். ஆண்டுக்கு நான்கு முறை செய்வது நல்லது. இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டால் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம். இரத்த அழுத்தம் உள்ளோர் அதற்கான உணவு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.

ஆரோக்கியமான உணவு பழக்கம்

உடலிலுள்ள உறுப்புகளுக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்குமளவுக்கு சமச்சீர் உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எந்த ஓர் உணவு பொருள் மட்டுமே உடலுக்குத் தேவையான அத்தசை சத்துகளையும் தந்துவிட முடியாது. வெவ்வேறு உணவு பொருள்கள் வேறுவேறு சத்துகள் அடங்கியவையாக இருக்கும். ஆகவே, ஒவ்வொரு பருவத்தின்போதும் (seasonal foods) கிடைக்கும் உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். முடிந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவு பொருள்களை தவிர்க்கவேண்டும். புதிதாக கிடைப்பவற்றிலேயே சத்துகள் இருக்கும்.

போதுமான அளவு சாப்பிடுவதற்கும், அதிகமாக சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துகொள்ளவேண்டும். எந்த உணவு பொருளையும் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். தொடர்ந்து ஒழுங்காக உடற்பயிற்சி செய்தல், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். நடைப்பயிற்சி (walking), மிதிவண்டி ஓட்டுதல் (cycling), நீந்துதல் (swimming) ஆகியவை சிறுநீரகங்களை பாதுகாக்க உதவும்.

சுய மருத்துவம்

உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல் என்று அவ்வப்போது வரும் உபாதைகளுக்கு நாமாவே ஏதாவது வலிநிவாரணி மருந்துகளை வாங்கி சாப்பிடுவதை (over-the-counter) கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். இதுபோன்று மருத்துவ ஆலோசனையில்லாமல் நீண்ட காலம் மருந்துகளை எடுத்துக்கொள்வது சிறுநீரக செயலிழப்புக்கு வழிகோலும்.

புகைத்தல்

புகை பிடிக்கும் பழக்கம் இரத்த நாளங்களுக்கு ஊறு விளைவிக்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணமாகும். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவஆலோசனை பெற்று அதற்கான சிகிச்சையை பெறுவதோடு, புகை பிடிக்கும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.

நெய்: தவிர்க்கவேண்டிய உணவு பொருளா?

You'r reading கிட்னியை பாதுகாக்க நடைமுறை வழிகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை