தாய்ப்பால் சுரக்கும், வாய் துர்நாற்றம் நீக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும் - வெற்றிலையின் மருத்துவ பயன்கள்...!

Betel Leaf Health Benefits

by SAM ASIR, Aug 22, 2020, 16:34 PM IST

வெற்றிலையை அறியாத சில தலைமுறையினர் பிறந்து வளர்ந்துவிட்டதாகவே தெரிகிறது. திருமண வீடுகளில் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்ட சொந்தங்களை இப்போது பார்க்க முடிவதில்லை. வெற்றிலை இடிக்கும் உரலோடு இருக்கும் பாட்டிகளும் வீடுகளில் இல்லை. ஆகவே, வெற்றிலையின் பயன்களை வாய்வழியே கேட்கும் வாய்ப்பு இல்லை.
கி.மு.400 ஆண்டு காலத்திலேயே இந்தியாவில் வெற்றிலை புழக்கத்தில் இருந்ததாக ஆயுர்வேத மருத்துவ நூல்கள் கூறுவதாகவும், கி.பி.70ஆம் ஆண்டுக்கும் கி.பி. 300ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சாப்பாட்டுக்குப் பிறகு வெற்றிலை போடும் பழக்கம் இருந்ததாகவும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. 13ஆம் நூற்றாண்டில் வந்த ஐரோப்பிய பயணி மார்க்கோ போலா, இந்தியாவில் ராஜாக்கள் மற்றும் பிரபுக்களிடம் வெற்றிலை மெல்லும் பழக்கம் இருந்ததை எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வெற்றிலையின் வகைகள்

வேளாண்மை பல்கலைக்கழக தகவல்படி வெற்றிலையில் கற்பூரகொடி, கள்ளர்கொடி, ரெவெசி, கற்பூரி,எஸ்.ஜி.எம் 1, எஸ்.ஜி.எம் (பிவி) -2, வெள்ளைக் கொடி, பச்சைக் கொடி, சிறுகமணி 1 , அந்தியூர் கொடி, கணியூர் கொடி மற்றும் பங்களா என்ற வகைகள் உள்ளன.
பொது மக்கள் மற்றும் கை வைத்தியம் செய்கிறவர்கள் வெற்றிலையை நிறத்தாலும், மணத்தாலும், சுவையாலும் வெற்றிலை மூன்று வகையாகப் பிரித்தறிகிறார்கள். குறைந்த மணமும் சற்று வெளிர் நிறமும், மிதமான காரச்சுவை உடையதையே பொதுவாக வெற்றிலை என்றும், சற்று கறுமை நிறமும் மிகுந்த காரமும் உடையதை கம்மாறு வெற்றிலை என்றும், சிறிது கற்பூர மணமும் நடுத்தர காரமும் உடையதை கற்பூர வெற்றிலை என்றும் அழைக்கிறார்கள். வெற்றிலை அநேக மருத்துவகுணங்கள் கொண்டது.



வாய் துர்நாற்றம்

தினமும் ஒரு வெற்றிலையை மென்றுவந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பலருக்கு இருக்கிறது. மலச்சிக்கலை போக்கும் தன்மை வெற்றிலைக்கு உள்ளது. 30 மில்லி லிட்டர் அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அல்லது வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.



குழந்தைகள் மலம் கழிதல்

குழந்தைகள் மலம் கழிக்காமல் இருந்தால் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து ஆசனவாயில் வைக்கலாம்.

செரியாமை

செரிமான மண்டல கோளாறுகள் பலவற்றை வெற்றிலை குணமாக்கும். வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். வெற்றிலை உடல் உறுப்புக்களை மட்டும் இன்றி உள்ளுறுப்புகளான பல்வேறு சுரப்பிகளையும் தூண்டி நன்கு செயல்பட வைக்கும் மூலிகை ஆகும். வயிற்றிலிருந்து துன்பம் செய்யும் வாயுவை சமன் செய்து வெளியேற்றுவதோடு செரிமானத்தை சீர்படுத்தக்கூடியதும் ஆகும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையுடன் நான்கு அல்லது ஐந்து மிளகு சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க பிள்ளைகளுக்கு செரியாமை தீரும்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மூன்றையும் சேர்த்து வாயிலிட்டு மென்று வரும் உமிழ்நீர், வாய் துர்நாற்றத்தை போக்குவதுடன் செரிமானத்தையும் துரிதப்படுத்தும்.
சளி, இருமல்

வெற்றிலையை தணலில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்கு பத்து துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். தணலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

தாய்ப்பால்

வெற்றிலையை நெருப்பில் காட்டி வதக்கி, அடுக்காக ஒன்றின்மேல் ஒன்றாக மார்பின் மேல் வைத்துக்கட்டுவதால் தாய்ப்பால் நன்கு சுரப்பதோடு குழந்தை சரியாகப் பால் குடிக்காதபோது பால் கட்டிக்கொண்டு மிக்க வேதனை தரக்கூடிய மார்பகக் கட்டியும் கரைந்து நலம் செய்யும்.


வெற்றிலை எண்ணெய்

வெற்றிலையை நீரிலிட்டுக் கொதிக்க வைப்பதால் ஒருவிதமான நறுமணமுடைய எண்ணெய் கிடைக்கும். இந்த எண்ணெயை சேமித்து வைத்து மேல் பூச்சாகப் பூசுவதால் புண்கள் சீழ் பிடிக்காமல் சீக்கிரத்தில் ஆறிவிடும். உள்ளுக்கு சில துளிகள் சாப்பிடுவதால் சுவாச நாளங்களைப் பிடித்த சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் ஆகிய நோய்கள் குணமாகும்.
ஈறுகளுக்கு ஆரோக்கியம். வெற்றிலை போடுவதால் ஈறுகளினின்று ரத்தம் கசிவது நின்றுவிடும். வெற்றிலையை வேக வைத்து நசுக்கி ஈறுகளின்மேல் தேய்ப்பதால் ஈறுகளின் ரத்தக்கசிவு நிற்பதுடன் பற்கள் பலமுறும்.

வெற்றிலை எப்படி போட வேண்டும்?

சுண்ணாம்பு தடவாத வெற்றிலையை முதலில் மென்று உடனே, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையை பாக்குடன் மெல்ல வேண்டும். மூன்றையும் ஒன்றாக மெல்லும் போது உமிழ்நீர் கலந்து முதலில் வரும் கடும் சுவையுள்ள சாற்றைத் துப்பி விட்டுப் பின்னர் ஊறும் நீரைச் சுவைத்தல் நல்லது. முதல் நீர் நஞ்சு. இரண்டாவது பித்த சூட்டை அதிகமாக்கும். மூன்றாவது அமுதம். நான்காவது மிகவும் இனிக்கும்.
சிட்டிகை வால் மிளகு, சுக்குத்தூள் கிராம்பு, ஏலம், ஜாதிக்காய் சேர்த்துச் சாப்பிட, நறுமணம் மட்டுமல்ல, வைரஸ்களையும், கிருமிகளையும் எதிர்த்துப் போராடும். ஆனால் வெற்றிலையை எப்போதும் காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி முன்னும் பின்னும் துடைத்துச் சுத்தமாக்கிய பின் பயன்படுத்த வேண்டும். இரண்டு முதல் நான்கு வெற்றிலை சாப்பிட்டால் போதும்.

முதியவர்கள் விடியற்காலையில் மலமிளகி வெளியாவதை விரும்பினால் பாக்கை அதிகமாகச் சேர்த்து மெல்லலாம். பகலில் சுண்ணாம்பு சிறிது கூடச் சேர்த்தால், பசி, செரிமானம், சுறுசுறுப்பிற்கு நல்லது. இரவில் வெற்றிலை அதிகமாவது செரிமானம் மற்றும். நரம்பு சுறுசுறுப்பிற்கும் ஏற்றது. வாய்மணம் கெடாது. அழுகல் அமில நாற்றம் ஏற்படாது. வயிற்றுப் பிரட்டல் நீங்க சோம்பு சேர்க்கலாம். நரம்பு பலம் பெருக குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி சேர்க்கலாம்.
நல்ல பசி உள்ளபோதும், பால் சாப்பிட்ட பிறகும் காய்ச்சல், நீரிழிவு, விக்கல், இதய நோய், ஆஸ்துமா, பேதி, காக்காய் வலிப்பு போன்ற உபாதைகளின் போதும் வெற்றிலை போடுவதை தவிர்க்கவேண்டும்.

You'r reading தாய்ப்பால் சுரக்கும், வாய் துர்நாற்றம் நீக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும் - வெற்றிலையின் மருத்துவ பயன்கள்...! Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை