இந்தியாவின் முதல் இயந்திர சமையல்காரர்.. வந்து விட்டது ரோபோ செஃப்..

Indias first Machine cook .. Robot Chef has arrived

by எஸ். எம். கணபதி, Nov 5, 2019, 12:25 PM IST

எத்தனை பேருக்கும் சுவை மாறாத உணவை வேகமாக சமைத்து தரும் இயந்திர சமையல் கலைஞர் ரோபோ செஃப் வந்து விட்டது. ஆம். இந்தியாவின் முதல் இயந்திர சமையல் கலைஞர்!

வீடுகளில் பெண்களின் திறமைகளை முடக்கிப் போட்டிருக்கும் ஒரு அறை சமையலறை. இதிலிருந்து பெண்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்று உணவுத் துறை சார்ந்த விஞ்ஞானிகள், ஏனைய தொழில்நுட்ப துறையினருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வகையில், மிக்சி, கிரைண்டர், ஜுஸ் மேக்கர், காபி மேக்கர், காய்கறி வெட்டும் கருவி, இன்டக்‌ஷன் ஸ்டவ் என்று பல்வேறு கருவிகள் வந்து விட்டன.

இதையெல்லாம் கடந்து, ஆன்லைனில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து வரவழைத்து சாப்பிடும் பழக்கமும் அதிகரித்து விட்டது. ஆனால், அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பை விட மிக குறைவுதான். பிரபலமான உணவகங்களுக்கு சென்றால், அங்கு ஒரு நாள் கிடைக்கும் சுவையான உணவுப் பொருள், மறு முறை அதே சுவையுடன் கிடைப்பதில்லை.

இந்த சூழ்நிலையில், சுவை, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை தயாரிப்பதற்காக புதிதாக வந்துள்ளது ரோபோ செஃப்... இது இந்தியாவின் முதல் சமைக்கும் இயந்திர மனிதன். இதன் செயல்பாடு குறித்து, இந்த ரோபோ சமையல் கலைஞரை வடிவமைத்த குழுவின் தலைவரும், ரோபோசெஃப் நிறுவனத்தின் உரிமையாளருமான சரவணன் சுந்தரமூர்த்தி கூறியதாவது:

“மென்பொருள் நிபுணராக 11 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, ரோபோசெஃப் என்ற இந்த இயந்திர மனிதனை வடிவமைத்து உள்ளோம். இது 600 வகையான ரெசிபிகளை சமைக்கும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.

இந்திய உணவு மற்றும் சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவு வகைகள் என பல நாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து விநியோகிக்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் சமையலுக்காக நீண்ட நேரத்தை ஒதுக்குவதை மக்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் இல்லத்தரசி சமையலுக்காக தினமும் குறைந்தது 6 மணி நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.

உணவகங்களில் ஊழியர்கள் அதிகாலை மூன்று மணியளவில் எழுந்து, காலை உணவை தயாரிக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஒரே மாதிரியான பணியை தொடர்ந்து செய்வதால், சலிப்பும் ஏற்படுகிறது. அது சுவையிலும் எதிரொலிக்கிறது.

இதனை மாற்ற வேண்டும், ஒரே சுவையுடன் அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளை சமைக்க வேண்டும், அதனை முழுவதும் தானியங்கி அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்பதுதான் ரேபோசெஃப் வடிவமைப்பின் உந்துதலாக இருந்தது.

மதுரை சிக்கன் பிரியாணியின் சுவையை மதுரையில் தயாரித்தால்தான் தர முடியும் என்பதை மாற்றியுள்ளோம். எங்களுடைய ரோபோ செஃப் சமைத்தால் மதுரை மட்டுமல்ல, உலகின் வேறு எங்கு சமைத்தாலும் ஒரே மாதிரியான சுவையைத்தான் தரும். இது ரோபோசெஃப் அளிக்கும் மிகப் பெரிய பலன்.

நாங்கள் இயந்திரவியல் துறையில் தானியங்கி முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். முப்பரிமாண அச்சு இயந்திரக் கருவியை முழுமையாக தானியங்கி முறையில் வடிவமைத்திருக்கிறோம். இன்றைய சூழலில் தானியங்கி என்ற தொழில்நுட்பம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மட்டும் பயன்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையை மாற்றி, ஏன் இதை வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது என்ற கோணத்தில் யோசித்தோம். இதன் தொடக்க நிலையில் ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டன. தற்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் ரோபோசெஃப் 18வது ஹார்ட்வேர் வெர்ஷன்.

ஒவ்வொரு முறையும் பிரத்யேகமான முறையில் மீண்டும் மீண்டும் ரீடிசைன் செய்து கொண்டேயிருந்தோம். இந்த துறையில் இருக்கும் பல முன்னணி நிறுவனங்களே இது குறித்து ஆய்வு நிலையிலேயே இருக்கும் போது உங்களால் மட்டும் எப்படி சாத்தியப்படும்? என்றார்கள். ஆனால் ஒன்றை நினைத்து அதில் முழு மனதுடன் பணியாற்றி வெற்றி கிடைக்கும் என்ற மனநிலையில் குழுவாக இணைந்து கடினமாக பணியாற்றியதால் இதனை உருவாக்க முடிந்தது. இதற்காக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

ரோபோசெஃப்பை பொறுத்த வரை நாங்கள் இரண்டு வகையான ரோபோவை அறிமுகப்படுத்துகிறோம். ஒன்று வணிக நோக்கம் கொண்டது. மற்றொன்று ரோபோசெஃப் மினி. இது இல்லத்தரசிகளுக்கு ஏற்றது. ரோபோசெஃப்பில் 600 வகையான ரெசிப்பிகளை செய்ய முடியும். சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, சாம்பார், ரசம், சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் என்று 600க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரிக்க முடியும்.

ரோபோசெஃப் சமைக்கும் முன்பு, என்ன உணவை தயாரிக்க வேண்டுமோ, அதற்கு தேவைப்படும் பொருள்களை, இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறிய வடிவிலான பெட்டி போன்ற ஹாப்பர்ஸ் அமைப்பில் இட வேண்டும். இது மட்டும்தான் இந்த இயந்திர மனிதனுக்கு நீங்கள் செய்யும் ஒரேயொரு வேலை.

இந்த இயந்திர மனிதனுக்குள் நாங்கள் முப்பத்தெட்டு ஹார்ப்பஸை அமைத்திருக்கிறோம். இதை தவிர்த்து, திடப் பொருட்களான காய்கறிகள் மற்றும் இறைச்சியை போட்டு வைத்துக் கொள்வதற்கென தனியாக 18 ஹாப்பர்ஸை அமைத்திருக்கிறோம். தற்போது இதில் சிறப்பு வசதியாக காய்கறிகளை நறுக்குவதற்காக தானியங்கி வெட்டும் இயந்திரத்தையும் பொருத்தியிருக்கிறோம்.

நீங்கள் என்ன வகையான உணவு தேர்வு செய்கிறீர்களோ அதற்கான ஆப்ஸை டவுண்லோடு செய்து, கிளிக் செய்தால் போதும். ரோபோசெஃப் குறைவான நேரத்தில், சுவையான உணவை தயாரித்து தருவார். சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்த நோயாளிகளுக்காக தயாரிக்க, இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்தால் போதும். சர்க்கரை குறைவாகவோ அல்லது உப்பு, காரம் குறைவாகவோ உணவு தயாராகிவிடும்.

இதன் மூலம், பல தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். உணவகத் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது, தினமும் ஒரே சுவையுடன் உணவுகளை தயாரிப்பதுதான். இதற்காக அவர்கள் குறிப்பிட்ட சமையல் கலைஞர்களை மட்டுமே நம்ப வேண்டியிருக்கிறது.

இந்நிலையில், இந்த ரோபோசெஃப் சமையல் கலைஞர்களுக்கான மாற்று அல்ல. அவர்களுக்கு உதவும் ஒரு கருவி. சுவைக்காக நாங்கள் வடிவமைத்திருக்கும் மென்பொருளில் தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபலமான சமையல் கலை நிபுணர்களின் பங்களிப்பு இருக்கிறது. அவர்களின் உதவியுடன் தான் மென்பொருளை வடிவமைத்திருக்கிறோம். இதன் மூலம், எத்தனை நபர்களுக்கு சமைத்தாலும் ஒரே விதமான சுவையுடன் தயாரிக்கமுடியும். இதனை மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறோம்.

இந்த ரோபோசெஃப்பில் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுகாதார முறையில் தயாரிக்கப்படுகிறது. நாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் பிரத்யேகமானவை. இதில் சமைக்கப்படும் உணவு ஆறு மணி நேரத்திற்கு சூடாகவும், சுவை மாறாமலும் இருக்கும். சமைத்த பின்னர், சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தப்படுத்தவும் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறோம். சமைத்த உணவை டேக் அவே பாணியில் எடுத்துக் கொண்டுச் செல்லும் வகையிலும் ரோபோசெஃப் சேவையாற்றும்”
இவ்வாறு சரவணன் சுந்தரமூர்த்தி விளக்கினார்.

ரோபோசெஃப் திட்டத்தை பற்றிய சில குறிப்புகள்:

* மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் சிறந்த ஸ்டார்ட்டப் நிறுவனம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது.

* துபாய் அரசின் உதவியுடன் அங்கு நடைபெற்ற உலகளவிலான கண்காட்சியில் இடம் பெற்று பலரின் பாராட்டுகளையும் ரோபோசெஃப் பெற்றிருக்கிறது.

* செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய ரோபோசெஃப் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரோபோசெஃபே விதவிதமான சுவையில், உணவைத் தயாரித்து மக்களை மகிழ்விக்கும்.

* ஒரே நிமிடத்தில் பத்து தோசையைத் தயாரிக்கும் கருவி, சப்பாத்தி மற்றும் புரோட்டாவை தயாரிக்கும் கருவி, பஜ்ஜி, போண்டோ போன்ற நொறுக்கு தீனிகளை தயாரிக்கும் கருவி என சமையலுக்கு பயன்படும் வகையிலான பல கருவிகளும், எங்களின் தயாரிப்புகளாக அறிமுகமாகி, வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

You'r reading இந்தியாவின் முதல் இயந்திர சமையல்காரர்.. வந்து விட்டது ரோபோ செஃப்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை