தகவல் உரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

Supreme Court verdict on plea to bring CJI office under RTI today

by எஸ். எம். கணபதி, Nov 13, 2019, 09:39 AM IST

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? என்பது குறித்த முக்கிய வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அவர் விசாரித்த முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை அளித்து வருகிறார். இந்த வரிசையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா என்பது குறித்த வழக்கில் அவரது தலைமையிலான அமர்வு இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வெளியிடுகிறது.

ஆர்.டி.ஐ. ஆர்வலர் அகர்வால் என்பவர் கடந்த 2009ம் ஆண்டில் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். 7.5.1997ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூட்டத்தில், நீதிபதிகள் சொத்துக்கணக்கு காட்ட வேண்டுமென்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் நீதிபதிகளின் சொத்து கணக்குகளை அவர் கேட்டிருந்தார். அதை சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அதை மறுத்திருந்தார். இதை எதிர்த்து தான் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ரவீந்திர பட், நவீன அரசியலமைப்பு காலத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரங்களும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று குறிப்பிட்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் ஆர்.டி.ஐ. சட்டத்தின் கீழ் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் ஏ.பி.ஷா, விக்ரம்ஜித் சென், முரளிதர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதன்பின், தலைமை நீதிபதி கோகய் தலைமயில் நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக்குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே ஆர்.டி.ஐ. சட்டத்தில் பாஜக அரசு திருத்தம் கொண்டு, சட்டத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது என்று ஆர்.டி.ஆர். ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 34 நீதிபதிகளில் ரஞ்சன் கோகய், பாப்டே, ரமணா, அருண்மிஸ்ரா, பானுமதி, கன்வில்கர், அசோக் பூஷண் ஆகியோர் சொத்து கணக்குகளை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading தகவல் உரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா? சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை