சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா? 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு

Supreme Court refers entry of women to Sabarimala to larger bench

by எஸ். எம். கணபதி, Nov 14, 2019, 11:07 AM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. இதனால், இந்த வழக்கு அதிக நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் வரும் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், அவர் தலைமையிலான அமர்வுகள் விசாரித்த வழக்குகளில் வரிசையாக தீர்ப்பு கூறப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக அனுமதி வழங்கப்படவில்லை. ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் இருக்கும் தெய்வம் என்பதால், மாதவிடாய் ஏற்படும் வயதில் உள்ள பெண்கள், அங்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண் குழந்தைகள் மற்றும் மூதாட்டிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுவதுண்டு. ஆண்கள் 40 நாட்கள் மனம், உடல்ரீதியாக மிகவும் சுத்தமாக விரதம் கடைபிடித்து வருவதால், பெண்களை அனுமதிப்பது, மனரீதியாக அந்த விரதத்தை கெடுத்து விடக் கூடிய வாய்ப்புள்ளதால் அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார்கள்.

இதை எதிர்த்து, ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்று கோரி கேரள ஐகோர்ட்டில் மனுக்கள் தொடரப்பட்டன. இந்த வழக்கு கடைசியாக சுப்ரீம் கோர்ட்டில் முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரும் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனி தீர்ப்பு கூறினார். மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர். அதாவது, கேரள இந்து பொது வழிபாடு(அனுமதி அளிக்கும் அதிகாரம்) விதிகள்-1965ல் பெண்களுக்கு அனுமதி மறுக்கும் பிரிவு 3(பி)-ஐ ரத்து செய்து உத்தரவிட்டனர். இது அரசியல் சட்டப்பிரிவுகள் 15, 25ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று குறிப்பிட்டனர்.

அதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அந்த கேரள இந்து பொது வழிபாடு(அனுமதி அளிக்கும் அதிகாரம்) விதிகள்-1965ல் அந்த சட்டப்பிரிவு செல்லும் என்று உத்தரவிட்டார். மேலும், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிப்பது, பார்சி பெண்களை அவர்களின் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது. அது வரை தற்போதைய நிலை தொடரும் என்று தீர்ப்பளித்தனர். எனவே, தற்போது பெண்கள் செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை.

You'r reading சபரிமலை கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதியா? 7 நீதிபதிகள் விசாரிக்க உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை