என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Jan 21, 2020, 18:54 PM IST

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக அவசர செயற்குழு கூட்டம், சென்னையில் இன்று(ஜன.21) நடைபெற்றது. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை வந்த வாக்காளர்களுக்கு செயற்குழுக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 512-ல் கழகம் 242 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளுடன் 266 வார்டுகளிலும் அமோக வெற்றி பெற்றிருக்கிறது. ஊராட்சி ஒன்றிய வார்டு பதவிகளில் 5076-ல் கழகம் 2090 வார்டுகளிலும், கூட்டணிக் கட்சியுடன் சேர்த்து 2,318 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

பல்வேறு அதிகார துஷ்பிரயோகத்தில் ஆளும்கட்சி ஈடுபட்டாலும், இவற்றையெல்லாம் மீறிய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது. இதற்காக உழைத்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர்களும் - துணைத் தலைவர்களும் - வார்டு உறுப்பினர்களும் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற கழகத்தின் அடிப்படை முழக்கத்தை மனதிலிருந்து அகலாமல் நிலை நிறுத்திக்கொண்டு - நேர்மையான, திறமையான, வெளிப்படையான தங்களது பணிகளின் மூலம் மக்களுக்கு நல்லதொரு உள்ளாட்சி நிர்வாகத்தினை அளித்திட வேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முழுவதையும் மதித்து - மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலையும், அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலையும் உடனடியாக நடத்திட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தை இந்தச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

ஈழத்தமிழர்களையும், சிறுபான்மையின மக்களையும் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நெருக்கடியையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் 2019-ம் வருட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு பாராளுமன்ற கூட்டுக்குழு - மக்களவை - மாநிலங்களவையில் ஆதரித்து வாக்களித்து அதன் காரணமாகவே வெற்றிபெற வைத்து, நாட்டிலுள்ள மாணவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இந்தச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

“மக்களுக்கு பாதிப்பு இல்லை” என்று தொடர்ந்து மக்களை திசை திருப்பி - பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சி ஆளும் மாநிலங்களிலேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ள நேரத்திலும், கேரள மாநில அரசு குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள சூழ்நிலையிலும் கூட, தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்கும் (NPR), தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) கண்மூடித்தனமாக அ.தி.மு.க. அரசு ஆதரவு அளித்து வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கேரளா, பஞ்சாப் மாநில சட்டமன்றங்கள் தீர்மானமே நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த தனிநபர் தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் ஏற்க மறுத்து, தமிழக மக்களுக்கு அ.தி.மு.க. அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) தயாரிப்பதற்கான புதிய படிவங்களில் உள்ள கேள்விகள், “குடிமக்களை சந்தேகத்திற்கு உரியவர்களாக பதிவு செய்யலாம்” என்று மக்கள் தொகைகணக்கெடுப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம், தகவல் அளிக்காதோர் மீது வழக்குப் போடும் அதிகாரம் அனைத்தும் நேர்மையானதொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அறிகுறிகளாக இல்லை என்பது ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க.விற்குத் தெரிந்திருந்தும் - மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் துயரத்திற்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கும் பா.ஜ.க.வின் செயலுக்கு உள்நோக்கத்துடன் துணை போவது மன்னிக்க முடியாத மாபாதகம் என்று இந்தச் செயற்குழு, அ.தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறது.
ஆகவே, தமிழக மக்கள் நலன் கருதியும், தேசிய ஒற்றுமை - ஒருமைப்பாடு கருதியும் “தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) தயாரிக்கும் பணியை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்” என்று உடனடியாக அ.தி.மு.க. அரசு அறிவிக்க வேண்டும் என்றும்; திருத்தச் சட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியான பதிவேடுகள் குறித்து விதண்டா வாதங்களைப் பேசும் வக்கணைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும்; இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
“தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் இடமில்லை” என்று மத்திய பா.ஜ.க. அரசு உயர்நீதிமன்றத்திலேயே கூறிவிட்ட நிலையில், “இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்” என்று இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்கும் அ.தி.மு.க. அரசுக்கு இந்தச் செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு என்பதை இந்தச் செயற்குழு பதிவு செய்கிறது. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை கழகம் வலியுறுத்தி வருகிறது.
அதிமுகவின் அராஜக ஆட்சியின் இன்றைய நிலை:

* 2600 ஆண்டுகள் பழமைமிக்க தமிழர்களின் நகர நாகரிகத்தின் ஆதாரங்கள் கீழடியில் கிடைத்தும், அங்கு ஆறாவது கட்ட அகழாய்வை தமிழக அரசு தாமதிக்கிறது.

* “நீட்” தேர்வை ரத்து செய்வதற்கு உறுதியான மனப்பூர்வமான முயற்சிகளை எடுக்காமல், காலம் தாழ்த்தி வழக்குப் போட்டு, நாடகம் ஆடி ஏமாற்றி, மாணவ மாணவியரின் மருத்துவக் கனவுகளைச் சிதைக்கிறது.

* ஹைட்ரோ கார்பனுக்கு “சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை” என்ற மத்திய அரசின் உத்தரவை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல், மாநில அரசே செய்ய வேண்டியதைச் செய்யாமல், மத்திய அரசிடம் மண்டியிட்டு, கடிதத்துடன் கையேந்தி நிற்கிறது.

* ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடுவதற்கு முயற்சிக்காமல், 13 அப்பாவிகளைச் சுட்டுக் கொன்று, அதிலும் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறது.

* 22,560 சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் துவங்கப் போகிறோம் என்று வெற்று அறிவிப்புச் செய்துவிட்டு- ஆயிரக்கணக்கான சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை இழுத்து மூடிவிட்டது.

* தொடர்ந்து ஏறிவரும் டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏன் என்று தட்டிக் கேட்க முடியாமல், கைபிசைந்து நிற்கிறது.

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ரூப்-4 தேர்வுகள் உள்பட பல தேர்வுகளில் வரலாறு காணாத குளறுபடிகளை உருவாக்கி, தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையினைப் பாழ்படுத்தி விட்டது.

* 1500 கோடி ரூபாய்க்கு மேலான நீண்ட கால நிலுவைத் தொகையால், கரும்பு விவசாயிகளை தீராக் கவலையில் தள்ளியுள்ளது. “கஜா” புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு முழுமையாக நிவாரணம் அளிக்காமல், தென்னை விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது.

அமைச்சர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் எதிர்ப்பு வழக்கு விசாரணைகளில், கூச்சமே இன்றி நேரடியாகத் தலையிடுகிறது.

* 1.50 லட்சம் கோடி கடனுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் திவாலாகி மூழ்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. 14,314.76 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையில் தமிழகம் வழிதவறித் திண்டாடுகிறது.

* 44,176.36 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையில் நிதிநிலைமை திசைமாறித் திணறுகிறது. மக்கள் தலையில் 3,97,495.96 கோடி ரூபாய் கடனைச் சுமத்திக் கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

* ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அனைவரின் கோரிக்கைகளையும் காது கொடுத்துக் கேட்காமல், கண்ணெடுத்துப் பார்க்காமல், அலட்சியப்படுத்தி - அல்லல்படுத்தி அராஜகம் செய்கிறது.

* காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத பரிதாப நிலையில் மாநில சட்டம் - ஒழுங்கு படுதோல்வி கண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கிப் பரவிட அனுமதித்து விட்டது.

* வேலை இல்லாத இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதில் அகில இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் என்ற மிகுந்த அவல நிலையை உருவாக்கியுள்ளது.

* குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக ரீதியில் அமைதியான அறப்போராட்டங்களில் ஈடுபடும் ஆயிரக்
கணக்கான மாணவர்கள், மக்கள் மீது அநியாயமாக வழக்கு - அடக்குமுறை ஏவிவிடப்படுகிறது.

* புத்தகக் கண்காட்சியில் கூட அச்சிடப்பட்ட புத்தகங்களை விற்க விடாமல், கருத்துச் சுதந்திரத்தின் கதவைச் சாத்தி, போலீஸ் மூலம் அடக்குமுறை ஆணவம் படமெடுத்தாடுகிறது.

இவை போன்ற எண்ணற்ற தோல்விகளால், மாநிலத்தின் நலனும் - வளர்ச்சியும் - வாழ்வும் குன்றிவிட்டன.

எனவே, மக்கள் விரோத - தமிழக உரிமைகளை சுய லாபத்திற்காகத் தாரை வார்க்கிற - ஊழல் சகதியில் மூழ்கிக் கிடக்கின்ற அ.தி.மு.க. அரசின் முகமூடியை, மக்கள் மன்றத்தில் தோலுரித்து, அதன் மோசடி சொரூபத்தை ஊரெங்கும் உணர்த்திட இந்தச் செயற்குழு சபதம் ஏற்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You'r reading என்.பி.ஆர். பணியை நிறுத்த திமுக செயற்குழு வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை