அமெரிக்க அதிபர் வருகை.. அகமதாபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி..

by எஸ். எம். கணபதி, Feb 23, 2020, 21:17 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக நாளை(பிப்.24) இந்தியா வருகிறார். அகமதாபாத், டெல்லியில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக இந்தியா வருகிறார். அவருடன் மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். இவர்கள் பிப். 24ம் தேதி காலை 11.30 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேருகின்றனர். விமான நிலையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்கள் மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்கு செல்கிறார்கள். பகல் 12.15 மணிக்கு அங்குச் செல்லும் அவர்கள் ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்து, காந்தியின் அடையாளங்களைப் பார்வையிட்டு விட்டுப் புறப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்திற்கு செல்கிறார். அவர்களுக்கு வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பகல் 1.05 மணிக்கு ஸ்டேடியத்திற்கு செல்லும் டிரம்ப், அங்கு பிரம்மாண்டமாக நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருடன் நமது பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு ஹவ்டி மோடி என்ற பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதில் டிரம்ப்பும் பங்கேற்றார். அதே போன்று, இப்போது நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு டிரம்ப்பும், மெலனியா டிரம்ப்பும் ஆக்ராவுக்குச் செல்கின்றனர். மாலை 5.15 மணிக்கு அங்குச் செல்லும் அவர்கள், தாஜ்மகாலைப் பார்த்து ரசிக்கின்றனர். அதன்பின், புதுடெல்லிக்குச் சென்று இரவு அங்குத் தங்குகிறார்கள்.

மறுநாள் காலை 10 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பை முடித்து விட்டு, டிரம்ப் அங்கிருந்து ராஜ்காட் சென்று காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

இதற்குப் பிறகு பிற்பகலில் புதுடெல்லியில் ஐதராபாத் இல்லத்திற்கு டிரம்ப் வருகிறார். அங்குப் பிரதமர் மோடியும், அவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசுகின்றனர். பின்னர், இரு நாட்டு அதிகாரிகள் மற்றும் தொழில் பிரதிநிதிகளுடன் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, இருநாடுகளுக்கும் இடையே 5க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. அறிவு சார்ந்த காப்புரிமை, வர்த்தகம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டிரம்ப் சந்திக்கிறார். அதன்பின், டிரம்ப் தனது நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

You'r reading அமெரிக்க அதிபர் வருகை.. அகமதாபாத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சி.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை