சிஏஏ போராட்டத்தில் வன்முறை.. டெல்லியில் பலி 18 ஆக உயர்வு..

by எஸ். எம். கணபதி, Feb 26, 2020, 11:39 AM IST

டெல்லியில் நேற்றும் கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இன்று 5 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், அடுத்து வரவுள்ள என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குடும்பத்துடன் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியே இருக்கிறது. கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், டெல்லி தேர்தலில் தோல்வியுற்ற பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா என்பவர், போலீசார் இந்த போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் அகற்றாவிட்டால், நாங்கள் களத்தில் இறங்கி அகற்றுவோம் என்று கெடு விதித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சிஏஏ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து, போராட்டத்தைத் தொடங்கினார்.

அப்போது, சிஏஏ சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். வன்முறை கும்பல் கல்வீசியதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலவரத்தில் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கடந்த 2 நாட்களாக பிரகாம்புரி, மவுஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக் போன்ற இடங்களில் இருதரப்பினருக்கு இடையே கல்வீச்சு, வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. நேற்று வரை கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை குரு தேவ்பகதூர் மருத்துவமனைக்குப் பலத்த காயங்களுடன் 5 பேர் கொண்டு வரப்பட்டனர். ஆனால், அவர்கள் 5 பேருமே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சுனில்குமார் கவுதம் தெரிவித்தார். இதையடுத்து, கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்திருந்த சமயத்தில் டெல்லியில் கலவரம் வெடித்தது, மத்திய அரசுக்கு அதிர்ச்சியளித்தது. மேலும், டெல்லி காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நேற்று முன் தினம் நள்ளிரவே உள்துறை அமைச்சர் அமித்ஷா, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி கவர்னர் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்களிடமும் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

You'r reading சிஏஏ போராட்டத்தில் வன்முறை.. டெல்லியில் பலி 18 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை