ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 3 பேர் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 2, 2020, 10:27 AM IST

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ள மாநிலங்களவை(ராஜ்யசபா) உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஏப்ரலில் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, மார்ச் 6 ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 13ல் முடிவடைகிறது. வாக்குப்பதிவு மார்ச் 26ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அதே நாளில். மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும். தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கள் திருச்சி சிவா (திமுக) மற்றும் அதிமுகவில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரது பதவி காலம் முடிவடைகிறது.
தமிழக சட்டசபையில் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் கிடைப்பார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சீட் கேட்டு பார்த்தன. ஆனால், திமுக தரப்பில் தங்களுக்கு ராஜ்யசபாவில் பலம் குறைவாக இருப்பதால், சீட் தர முடியாது என்று தெரிவிக்கப்பட்டு விட்டது.

இதைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர்களைக் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(மார்ச்1) அறிவித்தார். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி சிவா ஏற்கனவே 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும், ஒரு முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் பல தனி தீர்மானங்களைக் கொண்டு, மூத்த தலைவர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். திமுகவின் கொள்கைகளையும், சிறப்புகளையும் நாடாளுமன்றத்தில் தெளிவாக எடுத்துரைப்பவர். அதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
அந்தியூர் செல்வராஜ் ஏற்கனவே கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். திமுகவில் ஆதிதிராவிடர் நலப் பிரிவு செயலாளராக உள்ளார். திமுக எப்போதும் தாழ்த்தப்பட்டோருக்கு உரியப் பிரதிநிதித்துவம் தரும் என்பதை வெளிக்காட்டும் வகையிலும், சட்டசபைத் தேர்தலில் ஆதிதிராவிட மக்களின் வாக்குகளைப் பெறவும் இவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

திமுகவின் தலைமைக் கழக சட்ட ஆலோசகரான என்.ஆர்.இளங்கோ மூத்த வழக்கறிஞர். திமுகவுக்காகப் பல வழக்குகளில் ஆஜரானவர். வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நடந்த ராஜ்சபா தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிட்டார். அப்போது அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டிருந்ததால், அவரது மனு நிராகரிக்கப்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவருக்கு மாற்றாக திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ மனுத் தாக்கல் செய்திருந்தார். வைகோ மனு ஏற்கப்பட்டதால், இளங்கோ மனுவை வாபஸ் பெற்றார். தற்போது அவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.

அதிமுகவுக்கு 3 எம்.பி.க்கள் கிடைக்கும். அதிமுக கூட்டணியில் தேமுதிக ஒரு இடம் கேட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுகவிடம் கேட்கப்பட்டதாகவும், கூட்டணி தர்மத்தின்படி தற்போது ஒரு சீட் தர வேண்டுமென்று கேட்டுள்ளது. இதே போல், பாஜக சார்பில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற ஏ.சி.சண்முகத்திற்கு சீட் கேட்கப்பட்டிருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கேட்டிருக்கிறார். ஆனால், அதிமுகவிலேயே கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தளவாய்சுந்தரம், மனோஜ்பாண்டியன் உள்படப் பலர் சீட் கேட்பதால், கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கூட்டணிக் கட்சிக்கு சீட் தரக் கூடாது எனக் கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

You'r reading ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 3 பேர் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை