ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார்.. காங்கிரஸ் வேஸ்ட் என்கிறார்

by எஸ். எம். கணபதி, Mar 11, 2020, 17:02 PM IST

மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. குவாலியர் சிந்தியா மன்னர் பரம்பரையில் வந்த ஜோதிராதித்ய சிந்தியா, தனக்கு முதல்வர் பதவி கேட்டு காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதன்பிறகு, அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால், கமல்நாத் அவரை பொருட்படுத்தவே இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே சிந்தியா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் விலகி விடக் கூடும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால், காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகிய பிறகு, இடைக்காலத் தலைவராக உள்ள சோனியாகாந்தி பெயரளவில்தான் செயல்பட்டு வருகிறார். அவர் ம.பி. உட்கட்சிப் பூசலுக்குத் தீர்வு காண முயற்சிக்கவில்லை. இதை பாஜக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது.
வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. பாஜக ஏற்பாட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், பெங்களூருக்குச் சென்று, அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காலை பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். அதன்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாகச் சோனியாவுக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். நேற்றிரவு மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை அறிவித்தனர். 22 எம்.எல்.ஏ.க்கள் விலகுவதால், கமல்நாத் ஆட்சி கவிழ்வது உறுதியானது.

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஜோதிராதித்ய சிந்தியா இன்று(மார்ச்11) டெல்லியில் சந்தித்து முறைப்படி பாஜகவில் இணைந்தார். அப்போது சிந்தியா கூறுகையில், என் வாழ்க்கையில் 2 முக்கியமான திருப்பங்களைச் சந்தித்திருக்கிறேன். ஒன்று எனது தந்தையார் திடீரென மரணம் அடைந்தது. இன்னொன்று, இப்போது அரசியலில் புதிய பாதையை நான் தேர்ந்தெடுத்தது. காங்கிரஸ் கட்சி முன்பிருந்த காங்கிரசைப் போல் இல்லை. அந்த கட்சியிலிருந்தால் எந்த பணியையும் செய்ய முடியாது என்றார்.

You'r reading ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் சேர்ந்தார்.. காங்கிரஸ் வேஸ்ட் என்கிறார் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை